"நீங்களும் எடுக்கோணும்.. நானும் எடுக்கோணும்.." இயல்பா பேசிய எடப்பாடியார்.. அப்படியே அசந்துபோன மதுரை!
மதுரை: இந்தியாவிற்கே இன்று ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தருணமாகும். நாடு முழுக்க இன்று கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் துவக்கி வைக்கப்பட்டன.
Recommended Video
பிரதமர் மோடி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம், தடுப்பூசியை அறிமுகம் செய்து வைத்த பிறகு, தமிழகத்திலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த திட்டத்தை துவக்கி வைத்தார்.
மதுரை ராஜாஜி அரசு பொது மருத்துவமனையில் இதற்கான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வரலாற்று சிறப்பு
அரசு மருத்துவர் சங்க, மாநிலத் தலைவர் செந்தில் முதல் தடுப்பூசி போட்டுக் கொண்டார். இதன்பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்தார், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது அவர் கூறுகையில், இது ஒரு வரலாற்று சிறப்புமிகுந்த நிகழ்வாகும். ஏனெனில் இது உயிர் சம்மந்தப்பட்ட பிரச்சினை. பிரதமர் நரேந்திர மோடி விடா முயற்சியை எடுத்து கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளை அறிமுகம் செய்துள்ளார் என்றார்.
நீங்களும் எடுக்கோணும்
அப்போது, நிருபர் ஒருவர், அனைவரும் தடுப்பூசி போட வேண்டுமா என்று கேள்வியை எழுப்பினார். அதற்கு அழகான கொங்குத் தமிழில், பதில் சொன்னார் எடப்பாடியார். "நீங்களும் எடுக்கோணும்.., நானும் எடுக்கோணும்.., உங்கள் குடும்பத்தில் எடுக்கோணும்.., எங்கள் குடும்பத்தில் எடுக்கோணும்" என்றாரே பார்க்கலாம்.
ருசிகர பேச்சு வழக்கு
மதுரையில், கொங்குத் தமிழில் எடப்பாடியார் இப்படி பேசியது மிகவும் ருசிகரமான நிகழ்வாக அமைந்தது. பெரும்பாலும் இந்த பேச்சு வழக்கு மதுரை மக்கள் அறியாதது. எனவே கூடியிருந்த மருத்துவர்களும், நிருபர்களும், முதல்வரின் இந்த ஸ்லாங்கை கவனித்து பார்த்து ஒரு நிமிடம் அப்படி ரசித்தபடி நின்று விட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும்.
முதல் தடுப்பூசி
மேலும் தொடர்ந்த, முதல்வர் எடப்பாடியார், கொரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபடுவோருக்கு எளிதாக தொற்று ஏற்பட்டுவிடும் என்பதால், மருத்துவர்கள், முன்கள பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
அச்சம் வேண்டாம்
மக்கள் அச்சப்படாமல் தடுப்பூசி போடுவார்களா என்று ஒரு நிருபர் கேள்வி எழுப்ப, தமிழகத்தில் இன்று முதன் முதலில் அரசு மருத்துவ சங்கத் தலைவர் செந்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். பல்வேறு மருத்துவர்கள், செவிலியர்கள் போட்டுக்கொண்டுள்ளனர். டாக்டர்களே போட்டுக் கொண்டனர் என்றால், இந்த ஊசி சரியானது, எதிர்ப்பு சக்தி உள்ளது என்று தெரிந்துதானே போட்டுக்கொண்டுள்ளனர். முதலில் கொஞ்சம் அச்சமாகத்தான் இருக்கும். போகப்போக சரியாகிவிடும் என்றார் முதல்வர்.