சிவாஜி நிலைமைதான் வரும்.. முதல்வர் சொன்னதை நான் வழிமொழிகிறேன்.. அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
Recommended Video
மதுரை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நடிகர்கள் அரசியலுக்கு வரும்போது சிவாஜிகணேசனின் நிலைமைதான் வரும் என்று சொன்னதில் எள்ளளவும் மாற்றம் இல்லை. அதை நான் வழிமொழிகிறேன் என்று வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறியுள்ளார்.
தமிழக அரசின் சாதனையை விளக்கும் வண்ணமாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் 1000 பேர் கலந்து கொண்ட தொடர் ஜோதி நடைபயணம் நடைபெற்றது. இந்த நடை பயணம் ஐந்து நாட்கள் மதுரையில் உள்ள 10 தொகுதிகளில் மக்கள் சந்திப்பு நடைபெற உள்ளது.
நடைபயணத்தில் அந்தந்தப் பகுதிகளில் மக்களுக்குள்ளான பிரச்சனைகளான பட்டா வழங்குதல், மற்றும் அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் வழங்கப்படவுள்ளது. ஜோதி பயணம் மதுரை சிந்தாமணி நெடுஞ்சாலையில் ஆரம்பிக்கப்பட்டு ஐந்து நாட்கள் நடைபெறுகிறது.
பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறியதாவது, பொய்யான குற்றச்சாட்டுகளை அடுக்கி வரும் முக ஸ்டாலினுக்கு இந்தப் பயணத்தின் மூலமாக எங்களது ஆட்சியின் சாதனைகளையும் மக்களுக்கு உண்மைகளை எடுத்துரைத்து திமுகவின் பொய்யான முகத்தை தோலுரித்துக் காட்டுவதே எங்களது முதல் கடமை.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டிற்கு அழைத்து வர அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொள்வோம். உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் 100 சதவீத வெற்றி பெறப்போவது உறுதி.
முதலில் சைக்கிள் பேரணி கல்யாண வைபோகம் தற்போது தொடர் ஜோதி நடைபயணம் என மேற்கொண்டுள்ளோம். அடுத்ததாக உள்ளாட்சித்தேர்தல் வருவதையடுத்து மக்களை சந்திப்பதற்கு இது போல ஒரு புது வியூகம் வகுக்கப்படும்.
முதலமைச்சர் ஒரு கருத்துச் சொன்னால் அது மிகச் சரியானதாக இருக்கும் என்பதில் மாற்றமில்லை. நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் சிவாஜி கணேசன் நிலைமை என்று சொன்னதில் உண்மை உள்ளது மாற்றமில்லை என்றார் ஆர்.பி. உதயகுமார்.