முதல்வர் ஸ்டாலின் "அவங்கள" பக்கத்தில் வைத்து கொண்டே அந்த வார்த்தையை சொல்லலாமா.. தமிழக பாஜக விமர்சனம்
முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பை விமர்சித்துள்ளது தமிழக பாஜக
மதுரை: " நக்சல், பிரிவினைவாதம், தீவிரவாதம் போன்றவற்றை ஆதரிப்பவர்களை பக்கத்திலேயே வைத்து கொண்டு, விடியல் என்றும் வளர்ச்சி என்றும் சொல்லிக் கொண்டிருந்தால் யாரும் நம்ப மாட்டார்கள்" என்றும், திமுக வரலாற்றை திரும்பி பார்த்தால் அவர்கள் தொழில்களை வளர்த்த கதை தெரிய வரும் என்றும் பாஜக மாநில பொருளாளர் சேகர் கிண்டலடித்துள்ளார்.
நேற்று முன்தினம் சென்னையில் ஏற்றுமதியில் ஏற்றம் - முன்னணியில் தமிழ்நாடு என்ற மாநாட்டில் ரூ.2,120.54 கோடி மதிப்பீட்டில் 41,695 நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 24 தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
அதன்பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "தமிழ்நாடு கொண்டிருக்கும் பன்முக திறன்கள் மற்றும் வளங்களை கணக்கிட்டு பார்த்தால், நமது திறனுக்கேற்றவாறு, ஏற்றுமதியில் இன்னும் பலமடங்கு வளர்ச்சிபெற இயலும். பெரும்பாலான பொருட்கள் சில குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டுமே ஏற்றுமதிகள் செய்யப்படுகின்றன.
அமைச்சர்கள் போட்டி போட்டு பணியாற்றுகிறார்கள்... 1 லட்சம் இலவச மின் இணைப்பு வழங்கி ஸ்டாலின் பெருமிதம்
லட்சியம்
இந்நாடுகளுக்கு மட்டுமின்றி உலகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம், "Made in India" என்று நாம் சொல்கிறோம், அதுபோல "Made in Tamil Nadu" என்ற குரல் ஒலிக்கவேண்டும் என்பது எங்கள் ஆசை மட்டுமல்ல, லட்சியமும் கூட... அந்த லட்சியத்தை நோக்கியே எங்களின் பயணம் அமைந்திடும்" என்று கூறியிருந்தார். முதல்வரின் இந்த வார்த்தையைதான் எதிர்க்கட்சிகள் விமர்சிக்க தொடங்கி உள்ளனர். குறிப்பாக பாஜக இதை கையில் எடுத்து வருகிறது.
விமர்சனம்
பாஜக மாநில பொருளாளர் சேகர் இதுகுறித்து சொல்லும்போது, "தமிழகத்தை உயர்த்துவோம் என்று முதல்வர் ஸ்டாலின் சொல்வதில் தவறில்லை... ஆனால் 'மேட் இன் இந்தியா'விற்கு நிகராக 'மேட் இன் தமிழகம்' என சொல்வது மாயாஜால வார்த்தை மட்டுமே... மற்ற மாநிலங்களுக்கு இடையே போட்டி இருக்கலாம்... ஆனால் ஒரு மாநிலம் நாட்டையே தனக்கு நிகராக போட்டியாளராக கருதுவது பிதற்றல்.
ஆதிக்கம்
உள்நாட்டிலேயே மிகச்சிறப்பாக வாகனங்களை தயாரித்த ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ், இதே திமுக ஆட்சியில் தான் மூடப்பட்டது... அப்போது ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலையிழப்பு ஏற்பட்டது.. திமுக தொழிற்சங்க ஆதிக்கத்திற்கு எதிராக நிற்க முடியாமல் சிம்ஸன் நிர்வாகம் தொழிற்சாலையை இடம் மாற்றியது... திமுக தொழிற்சங்க போராட்டத்தால் பின்னி மில் மூடப்பட்டது... கோவையில் பல்லாயிரம் பவுண்டரிகள் திமுக ஆட்சியில் நிலவிய மின்வெட்டால் மூடப்பட்டன...
தொழிற்சாலைகள்
எத்தனையோ தொழிற்சாலைகள் தமிழகத்தில் முதலீடு செய்ய மறுத்து, மற்ற மாநிலங்களுக்கு சென்று கொண்டிருக்கின்றன.. வளர்ச்சி திட்டங்கள் அனைத்தையும் எதிர்த்து விட்டு தொழில் முன்னேற்றம் என்று பேசுவது மக்களை ஏமாற்றுவதாகும்.. நக்சல், பிரிவினைவாதம், தீவிரவாதம் போன்றவற்றை ஆதரிப்பவர்களை பக்கத்திலேயே வைத்து கொண்டு, விடியல் என்றும் வளர்ச்சி என்றும் சொல்லிக் கொண்டிருந்தால் யாரும் நம்ப மாட்டார்கள்" என்றார்.
Recommended Video
பிடிஆர்
ஏற்கனவே நிதியமைச்சர் பிடிஆர் பேசாத ஒரு விஷயத்தை பேசியதாக, சமூக வலைதங்களில் பாஜகவினர் பதிவிட்டும், கிண்டலடித்தும் வருகின்றனர்.. பதில் சொல் திமுக என்று ஜிஎஸ்டி விவகாரத்திலும் ஹேஷ்டேக்கை வைரலாக்கி கேள்வி எழுப்பியும் வருகின்றனர்.. இதற்கு திமுக தரப்பு தன்னுடைய கண்டனத்தை வலுவாக பதிவு செய்து வரும் நிலையில், தொழில்துறை சம்பந்தமாக இன்னொரு சீண்டலையும் பாஜக தரப்பு விமர்சித்து வருவது திமுகவுக்கு எரிச்சலை கிளப்பி வருகிறதாம்.