முதல்வர் ஸ்டாலின் மிக நாகரீகமாக நடந்து கொண்டுள்ளார்.. அவரை பாராட்டுகிறேன்.. கே.எஸ்.அழகிரி பேட்டி!
தமிழ்நாடு முதலமைச்சர் நாகரீகமாக நடந்து கொண்டுள்ளார் எனத் தெரிவித்துள்ளார் கே.எஸ்.அழகிரி.
மதுரை : முதலமைச்சர் ஸ்டாலின் அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்க வேண்டும் என்பதற்காக ஆளுநரின் தேநீர் விருந்தில் கலந்து கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சரின் இந்த செயலை நான் பாராட்டுகிறேன். அவர் நாகரீகமாக நடந்து கொண்டுள்ளார் எனத் தெரிவித்துள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.
குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்து நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகளை கண்டிக்கும் விதமாக, ஆளுநரின் தேநீர் விருந்தை திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன. சமீபத்தில் நடைபெற்ற பொங்கல் விருந்தையும் தமிழ்நாடு அரசு மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன.
தயங்கி நிற்காமல் அரசின் திட்டங்களை முழுமையாக பயன்படுத்துங்க! மக்களுக்கு உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்!
புறக்கணித்த கூட்டணி கட்சிகள்
குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்ற தேநீர் விருந்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், ஆளுநரின் சமீபத்திய பேச்சுகள், சட்டமன்றத்தில் உரையை மாற்றி படித்தது மற்றும் பல்வேறு மசோதாக்களில் கையெழுத்திடாமல் இருப்பது போன்ற காரணங்களை முன்வைத்து, விசிக தலைவர் திருமாவளவன் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து திமுக கூட்டணி கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மதிமுக ஆகிய கட்சிகளும் தேநீர் விருந்தை புறக்கணித்தன.
பங்கேற்ற முதல்வர் - அமைச்சர்கள்
இந்நிலையில் தேநீர் விருந்தில் கலந்து கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொலைபேசி வாயிலாகவும் அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து நேற்று மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அவருடன் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணித்த நிலையில், முதலமைச்சரும் அமைச்சர்களும் பங்கேற்றனர்.
முதலமைச்சரின் நாகரீகம்
இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, "ஆளுநர், முதல்வர் ஆகியோர் அரசியலமைப்பு சட்டத்துடைய இரண்டு பாகங்கள். முதலமைச்சர் அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்க வேண்டும் என்பதற்காக தேநீர் விருந்தில் கலந்து கொண்டார். இதுவே தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவ் கலந்து கொள்ளவில்லை. அது மரபல்ல. மரபு என்பது பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ இதுவரை எவ்வாறு நடைபெற்றதோ அதனை பின்பற்ற வேண்டும். அதில் விருப்பு வெறுப்பு என்பது முக்கியமில்லை, தமிழ்நாடு முதலமைச்சரின் இந்த செயலை நான் பாராட்டுகிறேன். அவர் நாகரீகமாக நடந்து கொண்டுள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.
மாபெரும் திட்டம்
சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "சேது சமுத்திரத் திட்டத்தின் தேவை பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக திராவிடர் கழகம் இன்று கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது. அதில் கலந்து கொள்வதற்காக நான் வந்துள்ளேன். சேது சமுத்திரம் திட்டம் என்பது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான திட்டம். சோனியா காந்தி பொறுப்பேற்று இருந்தபோது கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது அந்த மாபெரும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
ஒட்டுமொத்த விருப்பம்
தமிழ்நாட்டில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளுமே தென் தமிழ்நாட்டுக்கு சேது சமுத்திர திட்டம் வேண்டும் எனச் சொல்லி இருக்கின்றனர். எனவே தமிழர்களின் ஒட்டுமொத்த விருப்பம் இது. சேது சமுத்திர திட்டம் 2500 கோடி ரூபாய் திட்டத்தில் ஏறக்குறைய 600 கோடி ரூபாய் செலவு செய்த பிறகு அந்தத் திட்டம் நிறுத்தப்பட்டது.
அந்தத் திட்டத்தை நிறுத்துவதற்கு சொல்லப்பட்ட காரணங்கள் சரியானது அல்ல. சூயஸ் கால்வாய், பனமா கால்வாய் போன்றவை அந்தப் பகுதியின் வளர்ச்சிக்கு பெரும் வித்தாய் அமைந்தது. அதேபோல் சேது சமத்திர திட்டம் வந்தால் தென் தமிழ்நாட்டில் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடையும். எனவே ஒட்டுமொத்த தமிழர்களின் கருத்துக்காக மீண்டும் குரல் கொடுக்க வேண்டும் என்பதற்காக தற்போது வந்துள்ளோம்." எனத் தெரிவித்தார்.
எடுத்துக்காட்டு
மேலும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடும் சூழலில் வெற்றி வாய்ப்பு பற்றிப் பதிலளித்த கே.எஸ்.அழகிரி, "இடைத்தேர்தலில் எங்களுடைய கூட்டணி மகத்தான வெற்றி பெறும். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நாங்கள் பாடுபடுவோம். அதற்கு எடுத்துக்காட்டாகவே மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தற்போது எங்களுக்கு ஆதரவாக வந்துள்ளார்." எனத் தெரிவித்தார்.