பட்ஜெட்டை படிக்கவில்லை... நழுவிய கார்த்தி சிதம்பரம்... அதிமுகவை விமர்சிக்க தயக்கம்?
மதுரை: தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு மூன்று நாட்கள் ஆகிய நிலையில் அது குறித்து கருத்துக்கூற கார்த்தி சிதம்பரம் தயக்கம் காட்டிய விவகாரம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
தமிழக பட்ஜெட் குறித்து ஏமாற்றம் தரும் பட்ஜெட் என்றும், எதற்கும் உதவாத பட்ஜெட் என்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், அந்தக் கட்சியை சேர்ந்த மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பட்ஜெட் பற்றி பேச தயக்கம் காட்டியுள்ளார். சிவகங்கையில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த அவரிடம், தமிழக பட்ஜெட் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது தமிழக பட்ஜெட் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும், அதைப்பற்றி இன்னும் தாம் படிக்காததால் கருத்துக்கூற முடியாது எனவும் பின்வாங்கினார்.
தமிழக நிதிநிலை அறிக்கையை பக்கம் பக்கமாக படிக்கவில்லை என்றாலும் கூட, நேற்றைய தமிழ் தினசரி நாளிதழ்களை படித்திருந்தாலே போதுமானது. அனைத்திலும் முதல் பக்க செய்தியாக பட்ஜெட் விவரம் இடம்பெற்றிருந்தது. அதை அவர் படித்திருந்தாலே தமிழக பட்ஜெட் பற்றி கருத்து கூறியிருக்க முடியும், ஆனால் என்ன காரணத்திற்காகவோ தமிழக நிதிநிலை அறிக்கை தொடர்பாக பேச விரும்பவில்லை கார்த்தி சிதம்பரம். ஆனால், அதேவேலையில் அவரது தந்தையும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் மத்திய பட்ஜெட் குறித்து நாடு முழுவதும் விமர்சித்து பேசி வருகிறார்.
அண்மையில் காங்கிரஸ் தேவையில்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் பேட்டி அளித்தது முதலே, கார்த்தி சிதம்பரத்தின் செயல்பாடுகளில் மாற்றம் தென்படத் தொடங்கியுள்ளதாக கூறுகின்றனர் சிவகங்கை மாவட்ட திமுகவினர். முன்பெல்லாம் கார்த்தி சிதம்பரத்தின் தொகுதி சுற்றுப்பயண விவரம் திமுக நிர்வாகிகளுக்கும் முன்கூட்டியே தெரியப்படுத்தப்படும், இப்போது அதுபோல் எதுவும் நடப்பதில்லை அவர் வந்தபிறகு தான் உள்ளூர் நிர்வாகிகளுக்கே தெரியவருகிறது என திமுகவினர் புலம்புகின்றனர்.
இதனிடையே சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற இஸ்லாமியர்கள் மீதான தடியடி சம்பவத்துக்கு தனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதாக கூறினார் கார்த்தி சிதம்பரம். அரசியல் சாசனத்துக்கு விரோதமான சட்டம் என்பதால் தான் நாடு முழுவதும் சி ஏ ஏ-வுக்கு பலத்த எதிர்ப்புகள் உருவாகியுள்ளதாக தெரிவித்தார். நாடு தழுவிய அளவில் இந்த சட்டத்தை எதிர்த்து இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் பல தரப்பினரும் இப்போது போராட தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.