அண்ணாமலைக்கு பெரிய புரட்சியாளர் என்று நினைப்பு.. ஆனா அவர் சும்மா காமெடி தான்! மாணிக்கம் தாகூர் பரபர
மதுரை: விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை பல்வேறு விவகாரங்களில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றம் யூனியன் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பல முக்கிய திட்டங்கள் குறித்தும் பேசினார்.
மதுரை விமான நிலைய விரிவாக்கம், ராகுல் காந்தி பாத யாத்திரை, மின் கட்டண உயர்வு என்று பல்வேறு விஷயங்கள் குறித்தும் மாணிக்கம் தாகூர் விரிவாகப் பேசினார்.
காமராஜர் தெரியும்.. “காந்தி” குடும்பம் அல்லாத யாரெல்லாம் காங்கிரஸ் தலைவராகி உள்ளார்கள் தெரியுமா?
மாணிக்கம் தாகூர்
செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மதுரையில் ஜே பி நட்டா இரண்டு பொய்களைக் கூறி சென்றார். ஒன்று மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை.. மற்றொன்று மதுரை விமான நிலையம்.. மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணி நின்று விட்டதாகவும் அதற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியதாகவும் கூறுவது முழு பொய். என்ன நடந்தது என்று மதுரை விமான நிலைய குழு தலைவர் என்ற முறையில் நான் கூறுகிறேன்.
தாமதம் ஏன்
2019இல் மதுரை விமான நிலைய ஓடுதளம் அண்டர் பாஸ் முறை இல்லாமல் செயல்படுத்தத் திட்டமிட்டிருந்தனர். 2019இல் மத்திய அரசு வாரணாசி., மைசூர்., மதுரை என மூன்று விமான நிலையங்களிலும் ஜெர்மன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அண்டர் பாஸ் முறையில் செயல்படுத்த இருப்பதினால் நிலம் அதிகம் தேவையில்லை எனத் தமிழக அரசுக்கு 2020இல் கூறியது. இருப்பினும், இதற்கான பட்ஜெட் அதிகரித்தால் நிலத்தை கையகப்படுத்தி, பழைய முறையில் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என மத்திய அரசு தெரிவித்தது.
மதுரை விமான நிலையம்
நிலம் கையகப்படுத்தும் பணி நின்று போனது இதனால் தான். தங்கள் மீது இருக்கும் பழியை மாநில அரசு மீது மாற்றப் பார்க்கிறார்கள். மதுரை விமான நிலையத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறது. 24 மணி நேர சேவை இல்லாததால் சென்னைக்கு 6.30 மணி வரை தான் விமானம் உள்ளது. ஏர்போர்ட்டை இரவு 9 மணிக்குப் பூட்டுகின்றனர். மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கோரிக்கை விடுத்துள்ளோம் இதைக் கவனிக்கவில்லை என்றால் போராட்டம் நடத்துவோம்" என்றார்.
குரல் கொடுப்போம்
மின் கட்டணம் உயர்வு குறித்த கேள்விக்கு, "மக்களைப் பாதிக்கும் திட்டம் எங்கு இருந்தாலும் அதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி குரல் கொடுக்கும். தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்ட போதும் கூட தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி மட்டும் தான் முதலில் எதிர்த்து குரல் கொடுத்தவர். யாருடைய ஆட்சியிலும் மக்களைப் பாதிக்கும் திட்டம் வந்தாலும் குரல் கொடுப்போம்.
அண்ணாமலை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து முரணாகவே பேசுகிறார். தப்பான தகவல்களையே தருகிறார். அண்ணாமலை தமிழக அரசியலில் தன்னை தானே மிகப் பெரிய புரட்சியாளர் என்று நினைத்துக் காட்டிக் கொள்கிறார். ஆனால், அவரை பொதுமக்கள் நகைச்சுவை நடிகராகவே பார்க்கிறார்கள் என்பதே உண்மை. ராகுலின் பாத யாத்திரை குறித்து அவர் சிறுபிள்ளைத்தனமான கருத்துகளைக் கூறி வருகிறார். மக்களின் உண்மை பிரச்சினையை ராகுல் காந்தி பேசுவதாகவே மக்கள் பார்க்கிறார்கள். அவருக்கு ஆதரவு அதிகரித்தே வருகிறது.
ஜேபி நட்டா
அறிவார்ந்த தலைவர்களைத் தேர்ந்தெடுங்கள் என ஜே.பி.நட்டா சொல்லிருப்பதாகக் கேட்கிறீர்கள். மதுரை எம்பி சு.வெங்கடேசன் சாகித்ய அகாடமி விருது பெற்றவர். நான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தவன். நட்டாவின் பேச்சு என்பது திமிரான பேச்சாகவே தெரிகிறது. அவர்கள் சொல்லும் பொய்யை நாங்கள் தோலுரித்துக் காட்டி வருகிறோம். இதன் காரணமாகவே அவர்கள் இப்படி திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.
மதுரை எய்ம்ஸ்
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 95 சதவீதம் முடிந்துவிட்டதாகக் கூறினார். ஆனால், அது பொய் என்பதை நாங்கள் களத்திற்குச் சென்று காட்டினோம். இதனால் பாஜகவினர் மனவேதனையில் இருந்திருக்கலாம். உண்மையிலேயே அவர்கள் நேர்மையானவர்களாக இருந்திருந்தால், வாய் தவறி தவறாகச் சொல்லிவிட்டோம் என்று சொல்லி இருக்கலாம். அத்துடன் இந்த விவகாரம் முடிந்து இருக்கும்" என்று அவர் தெரிவித்தார்.