கோடி கோடியா வருமானம் வேணுமா.. வாங்க இங்க.. ஆஆ.. தெறிக்க விட்ட போஸ்டர்!
மதுரை அருகே கண்மாய் விற்பனைக்கு என்ற போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
மதுரை: "கோடி கோடியா வருமானம் வேணுமா.. வாங்க இங்க.. கண்மாய் விற்பனைக்கு இருக்கு" என்ற ரேஞ்சில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் மழையே இல்லை.. இதனால் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அன்னைக்கே ஏரி, குளங்களை தூர் வாரி ஏற்பாடு செய்திருந்தால், இந்த நிலை ஏற்பட்டு இருக்குமா என்ற ஆதங்கம் அரசு மீது எல்லோருக்குமே பொதுவாக ஏற்பட்டுள்ளது.
இந்த வறட்சியைதான் சிலர் தவறாக பயன்படுத்தி காசு பார்க்க முடிவு செய்துள்ளனர். குறிப்பாக கண்மாய் நிலங்களை ஆக்கிரமித்து வீடு கட்டிக்கொள்ளுதல் உட்பட பல வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஒரு போஸ்டர், மதுரை ஊமச்சிகுளம் பகுதியில் அடித்து ஒட்டப்பட்டுள்ளது. "கண்மாய் விற்பனைக்கு" என்ற தலைப்பில் அந்த போஸ்டர் உள்ளதை பார்த்ததும் மக்கள் அதிர்ந்து போய்விட்டனர்.
பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடந்தகுளம் கண்மாய், பண்ணைகுடி பகுதியிலுள்ள அம்மன்குளம் கண்மாய் ஆகியவற்றை சட்டவிரோதமாக சிலர் ஆக்கிரமித்துள்ளனர். ஆனால் இந்த ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக அரசு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம்தாழ்த்தி வருகின்றனர்.
இதனை குறிப்பிட்டுதான், "கண்மாய்கள் விற்பனைக்கு" எனப் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் "கண்மாய் பகுதிகளில் வீடு கட்டிக் குடியேறலாம்.. மறுவிற்பனை மூலம் கோடிகோடியாக வருமானம் பார்க்கலாம்.. முதலில் வரும் 100 ஏழைகளுக்கு 2 செண்ட் இலவசம்" என சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்த போஸ்டருக்கு கீழே, "சங்கரபாண்டி, பாஜக கட்சியின் பொறுப்பாளர்" என்ற பெயர் இடம்பெற்றுள்ளதுதான் ஹைலைட் மேட்டர்!