தமிழகத்தில் முதல் கொரோனா பலி.. எப்படி இறந்தார்?.. நோய் தாக்கிய பரபரப்பு பின்னணி!
மதுரை: கொரோனா வைரஸ் பாதிப்பால் தமிழகத்தில் ஒருவர் உயிரிழந்திருப்பது பொதுமக்கள் இடையே மேலும் அச்சத்தையும், பதற்றத்தையும் அதிகரித்துள்ளது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த 54 வயது நபர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது இறுதிச்சடங்கு எந்தவித காலதாமதமும் இல்லாமல் உடனடியாக மேற்கொள்ளப்பட்டு மதுரை கோமதிபுரத்தில் இறந்தவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
தாய்லாந்து
மதுரை அண்ணாநகர் பள்ளிவாசலுக்கு தாய்லாந்தில் இருந்து வருகை தந்த தப்லீக் ஜமாத்தினர் (மார்க்க விளக்க பிரசங்கம் குழு) கடந்த 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் அங்கு முகாமிட்டுள்ளனர். அப்போது அவர்களுக்கு தேவையான உதவிகளை தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 54 வயது நபர் செய்துகொடுத்துள்ளார். மேலும், இரண்டு நாட்களும் தாய்லாந்து குழுவுடன் தங்கி மார்க்க விளக்க பிரசங்க நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். மார்ச் 12, 13 ஆகிய தேதிகளை பொறுத்தவரை கொரோனாவை பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாத தருணம் என்பதால் தாய்லாந்து குழுவினருடன் அவர் சகஜமாக இணைந்திருந்தார்.
மருத்துவ சிகிச்சை
இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்த 54 வயது மதுரைக்காரருக்கு ஏற்கனவே நாட்பட்ட நுரையீரல் தொடர்பான பிரச்சனைக்கு சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார். மேலும், அவருக்கு ஆஸ்துமா, கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சர்க்கரை என பல நோய்களும் இருந்து வந்துள்ளன. கூடவே கொரோனா வைரஸும் தொற்றிக்கொண்டதால் அவரல் அந்த நோயிலிருந்து மீண்டு வர முடியாமல் மீளா துயிலுக்கு சென்றுவிட்டார். இதனிடையே கடந்த சில மாதங்களாக சிறுநீரகங்கள் இரண்டும் அரை செயல்பாட்டில் மட்டுமே இயங்கி வந்ததாக கூறப்படுகிறது.
நோய் எதிர்ப்பு
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 54 வயது மதுரையை சேர்ந்த நபருக்கு அண்ணா நகர் பகுதியில் மிகுந்த செல்வாக்கு இருக்கிறது. காரணம் அண்ணா நகர் பள்ளிவாசல் நிர்வாகியாக இருந்த போது, பல குடும்ப பிரச்சனைகளையும் நியாயமான முறையில் தீர்த்து வைத்திருக்கிறார். மேலும், கருத்து வேறுபாடு காரணமாக திருமண வாழ்க்கையை முறித்துகொள்ள வந்த பல இளம் தம்பதிக்கு அறிவுரைகள் வழங்கி பலரையும் மீண்டும் சேர்ந்து வாழ வைத்துள்ளார். இதனால் இவரது மறைவு மதுரை அண்ணா நகர் பகுதி மக்களுக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
4 பேர் மட்டும்
அரசு மருத்துவமனையில் இருந்து நேராக மருத்துவமனை ஊழியர்கள் அடக்கம் செய்வதற்காக கோமதிபுரம் மையவாடிக்கு கொண்டு சென்றனர். அங்கு இறந்தவரின் மகனே தனது தந்தைக்கு ஜனாஸா தொழுகை(இஸ்லாமியர்கள் இறந்தால் இறுதியாக நிறைவேற்றப்பட வேண்டிய கடமை) நடத்தியுள்ளார். மேலும், இறுதிச்சடங்கில் 4 பேருக்கு மட்டுமே அனுமதி என காவல்துறையும், மாநகராட்சியும் கூறிவிட்டதால் வேறுவழியின்றி நான்கு பேருடன் இறுதிச்சடங்கு மேற்கொள்ளப்பட்டது.