கொரோனா தடுப்பூசி : மதுரையில் இன்று தொடக்கி வைக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை தொடங்கி வைக்கிறார்.
மதுரை: தமிழகத்தில் 166 மையங்களிலும் நாளை தடுப்பூசி போடப்படுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் ராஜாஜி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் முதல் கட்டமாக 5.36 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்குகிறது.
இந்தியாவில் ஒரு கோடி பேருக்கும் மேல் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டாலும் ஒரு கோடி பேர் வரை குணமடைந்துள்ளனர். தினசரியும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது. நாடு முழுவதும் இரண்டு கட்டங்களாக கொரோனா தடுப்பூசி ஒத்திகை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. ஜனவரி 16 முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
இதனையடுத்து 1கோடியே 10 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஆர்டர் கொடுத்தது. ஒரு டோஸ் 200 ரூபாய்க்கு கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து வாங்கப்பட்டுள்ளது. இதே போல 55 லட்சம் கோவாக்சின் மருந்துகளை வாங்க முதற்கட்டமாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதனையடுத்து கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 5.36 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி மற்றும் 20 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசி கடந்த வாரம் தமிழகம் வந்தது. இதனைத்தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த தடுப்பூசி பிரித்து அனுப்பப்பட்டது. தற்போது, அனைத்து மாவட்டங்களில் உள்ள தடுப்பூசி சேமிப்பு கிடங்குகிகளில் இது சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் பிரதமர் மோடி இன்று காலை 10.30 மணியளவில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி நடைபெறும்.
தமிழகத்தில் முதல் கட்டமாக 5.36 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நாளை தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் 2,850 இடங்களில் கொரோனா தடுப்பூசி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதில், முதல்கட்டமாக 166 மையங்களில் தடுப்பூசி போடும் பணி இன்று சனிக்கிழமை தொடங்குகிறது. மதுரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைக்கிறார்.
சென்னையில் ராஜிவ்காந்தி, ஓமந்தூரார், கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி, ராயப்பேட்டை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் எழும்பூர் மகப்பேரு மருத்துவமனை ஆகிய அரசு மருத்துவமனைகளிலும் மாநகராட்சிக்கு உட்பட்ட போரூர், ஈஞ்சம்பாக்கம், மாதவரம், திருவெற்றியூர் ஆகிய இடங்களில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி போடும் பணி நாளை நடைபெறுகிறது.
இதேபோன்று, ஒவ்வொரு சுகாதார மாவட்டங்களிலும் இரண்டு முதல் நான்கு இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது. முக்கியமாக கோவையில் 4, மதுரையில் 5, திருச்சியில் 5, சேலத்தில் 7 இடங்களில் நாளை தடுப்பூசி போடப்படும். இதற்காக அனைத்து இடங்களிலும் வசதிகள் தயார்நிலையில் உள்ளன.
முதல் கட்டமாக பெயர்களை முன்பதிவு செய்த சுகாதார பணியாளர்கள் அவரவர் விருப்பத்தின் பேரில் வந்து தடுப்பூசி போட்டுக்கொள்வார்கள். தமிழகத்தில் தற்போது வரை 4 லட்சத்து 39 ஆயிரத்து 500 பேர் தடுப்பூசி போட முன்பதிவு செய்துள்ளனர்.
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் தடுப்பூசி போடப்படும். இலவசமாகவே தடுப்பூசிகள் போடப்படுகிறது. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் சுமார் 30 நிமிடம் பக்கத்து அறையில் அமர வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள். அவர்களுக்கு பக்க விளைவு ஏதும் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்த பிறகே அனுப்பி வைக்கப்படுவார்கள்.
அடுத்த கட்டமாக சமூகத்தில் முதல் நிலை பணியில் உள்ளவர்களுக்கும், காவல் துறையில் விருப்பம் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படும். தடுப்பூசி என்பது நோய் வராமல் தடுக்க மட்டுமே. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை கட் டாயம் கடைபிடிக்க வேண்டும்.
தடுப்பூசிகள் 2 முறை 28 நாட்கள் இடைவெளியில் இலவசமாக போடப்படும். ஒரே நிறுவனத்தின் தடுப்பூசி தான் இரண்டு முறையும் போடப்படும். வேறு நிறுவனத்தின் தடுப்பூசி போடப்படாது. கர்ப்பிணிகள், சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.