கொரோனா காரணமாக அதிகரிக்கும் தற்கொலை.. திருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏ கடும் கண்டனம்.. அறிக்கை!
மதுரை: மதுரை தனியார் கல்லூரியில் தங்கி இருந்த கொரோனா தொற்று பாதித்த முதியவரின் தற்கொலைக்கு காரணமான அரசின் திட்டமிடாத செயல்பாடுகளுக்கு திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ டாக்டர் பி சரவணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று 3882 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 94049 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காத வேகத்தில் பரவி வருகிறது. சென்னையில் மட்டும் இன்று 2,182 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மொத்த பாதிப்பு 60,533 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா எண்ணிக்கை வேகமாக உயர்ந்து குறித்தும், பலி எண்ணிக்கை அதிகமாவது குறித்தும் திமுகவை சேர்ந்த திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ டாக்டர் பி சரவணன் கருத்து தெரிவித்துள்ளது.
அதில், கடந்த நான்கு மாதங்களாக உலகையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா என்ற பெருந்தொற்றானது இந்தியாவிலும் அதனுடைய கோர தாண்டவத்தை நடத்தி வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் தொற்று எண்ணிக்கை ஆரம்பத்தில் குறைவாக இருந்த போதிலும் தமிழக அரசனுடைய முறையான திட்டமிடாத செயல்பாடுகளினால் பெருந்தொற்று எண்ணிக்கை ஆனது நாளுக்கு நாள் அதிகமாகியுள்ளது. இதனை கட்டுபடுத்த முறையான நடவடிக்கை ஏதும் அரசு தானாகவும் எடுக்கவில்லை. மேலும் எதிர்கட்சி தலைவர் திரு ஸ்டாலின் அவர்கள் கூறிய பல்வேறு பயனுள்ள திட்டங்களையும் ,செயல்பாடுங்களையும், தன்னுடைய மெத்தனபோக்கினால் கண்டு கொள்ளமால் இருந்துவிட்டு தமிழக மக்களின் வாழ்வாதாரத்தையும் தொழிலையும் , உடல்நலத்தையும், உயிரையும் கேள்விகுறி ஆக்கியுள்ளது. இதற்கு பல்வேறு உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
தமிழக அரசானது ஊரடங்கை மட்டுமே ஒரு தீர்வாக எண்ணி ஐந்து முறை ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. ஆறாவது ஒரு ஊரடங்காக சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சென்னை மண்டலம் அதிக பாதிப்பு உள்ள மண்டலமாக அறிவிக்கப்பட்ட காரணத்தினால் பல்வேறு பணிகளில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த மக்கள் உயிர் பிழைத்தால் போதும் என்று சென்னையினை விட்டு வெளியேறி குறிப்பாக மதுரை போன்ற தென்மாவட்டங்களில் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்பி உள்ளனர். இதை தமிழக அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. மேலும் தொற்று ஏற்பட்டவர்களுக்கு முறையான பரிசோதனைகளும் உடனடியாக செய்யப்படவில்லை.
சாத்தான்குளம் மரணத்தை வைத்து அரசியல் செய்வதா? திமுக முகமற்று அழியும்.. அமைச்சர் சி.வி. சண்முகம்!
அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கும் முறையான உணவு, பராமரிப்பு, மருந்துகள், மருத்துவ ஆலோசனைகள், மற்றும் மன நல ஆலோசனைகள் வழங்கப்படுவதில்லை. இதனால் அரசு மருத்துவமனைகளின் மேல் மக்கள் முற்றிலும் நம்பிக்கை இழந்து விட்டனர். மேலும் தொற்று வந்தவர்களை மிதமான பாதிப்பு முதல் அதிக பாதிப்பு வந்தவர்கள் என்று வேறு படுத்தினாலும் அதற்குறிய சிகிச்சைகள் வழங்கப்படவில்லை. தொற்று பாதிப்பு அறிகுறிகள் உள்ளவர்களை தனியார் கல்லூரிகளில் முறையான கவனிப்பு இன்றி ஏனோ தானோ என்று தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அவ்வாறு எனது தொகுதிகுட்பட்ட தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் தங்கி இருந்த மதுரை பழங்காநத்ததைச் சேர்ந்த தனிக்கொடி என்ற 60 வயது முதியவர் மன உளைச்சலால் நம்பிக்கையினை இழந்து மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.இதுபோல் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தற்கொலை முயற்ச்சிகளும், தற்கொலைகளும் நடந்து வருகிறது.இதனை தடுப்பதற்கு அரசு எந்தவித நடவடிக்கையினையும் எடுக்கவில்லை.
மேலும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடல்களை உடனே அப்புறப்படுத்தாமல் நோயாளிகள் தங்கி இருக்கும் அறையிலேயே வைத்திருந்த்தால் நோயாளிகளுக்கு பெரும் அச்சத்தை உருவாக்கி உள்ளது. இதுபோன்ற செயல்கள் குறித்து மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆனையர் , மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகளிடம் எடுத்துக்கூறியும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.
தமிழக அரசின் முறையற்ற திட்டமிடல், செயல்பாடுகள், நாளுகொரு அணுகுமுறை , அறிவிப்புகள் என்று அனைத்துமே மக்களை குழப்பத்திலும் , துன்பத்திலும் , மன உளச்சல் அளிப்பதாகவே இருக்கிறது. அரசின் இந்த செயல்கள் அனைத்தையும் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தமிழக அரசு இனியும் ஊரடங்கை மட்டுமே நம்பி இருக்காமல் ஆக்கப்பூர்வ திட்டங்கள் வகுத்து , காலம் தாழத்தாமல் அதிக பரிசோதனைகள் எடுத்து நோய்தொற்றினையும், உயிர் பலியினையும் குறைக்குமாறும் நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் முறையான மன நல ஆலோசனைகள் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுகொள்கிறேன், என்று திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ டாக்டர் பி சரவணன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.