கோடீஸ்வர தம்பதியின் கொடூர மரணம் - ஆன்லைன் சூதாட்டத்தால் விபரீதம்
மதுரை அருகே ஆன்லைனில் ரம்மி விளையாடி கோடிக்கணக்கான ரூபாய்களை இழந்த தம்பதியர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்துயுள்ளது.
Recommended Video
மதுரை: ஆன்லைன் ரம்மி விளையாட்டு போதை பணத்தை இழக்க வைப்பதோடு உயிரையும் பறித்துள்ளது. காமராஜர் பல்கலைக்கழகம் அமைந்துள்ள நாகமலை புதுக்கோட்டையில் கோடீஸ்வரர்களாக வாழ்ந்த தம்பதியர் பணத்தை இழந்த சோகத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டனர். தங்களின் மரணத்திற்கு யாரும் காரணமில்லை என்று எழுதப்பட்ட தற்கொலைக்கடிதம் சிக்கியுள்ளது.
கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்டவர் வேங்கட சுப்பிரமணியன், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப் படிப்புக்காக நாகமலை புதுக்கோட்டையில் தங்கியிருந்தார். படிப்பை முடித்து விட்டு அங்கேயே செட்டிலாகிவிட்டார். ஆய்வு மாணவர்களுக்கு உதவி செய்து வந்த அவர், டேட்டா அனாலிசிஸ் வேலையை ஆன்லைனில் செய்து வந்தார்.
திருநகரைச் சேர்ந்த ஆய்வு மாணவி பட்டு மீனாட்சியை காதலித்து கடந்த 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இருவரின் பெற்றோர்களின் ஆசியுடன் திருமணம் நடைபெற்றது. வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் வேலை செய்த அவர்கள் பணத்தையும் பல வகையில் முதலீடு செய்தனர். ஏழு ஆண்டுகள் ஆகியும் பிள்ளை இல்லாத சோகமும் வாட்டி எடுத்தது. இருந்தாலும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்தனர்.
இவர்களின் வாழ்க்கையில் ரம்மி வடிவில் வந்தது எமன். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தம்பதியர் இருவருமே ஆர்வம் காட்டி வந்தனர். இதன்மூலம் நிறைய சம்பாதித்துள்ளனர். நாளடைவில் ரம்மி விளையாட்டில் நிறைய பணத்தை இழக்கத் தொடங்கினர். கடன் நெருக்கவே, காரை விற்றுள்ளனர்.
பப்ஜி பார்ட்னர் போதுங்க... புருஷன் வேண்டாங்க - விவாகரத்து கேட்ட அகமதாபாத் பொண்ணு
கடந்த சில தினங்களாக இருவரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அக்கம் பக்கத்தினரும் முதலில் கண்டு கொள்ளவில்லை. கோடை விடுமுறைக்கு வெளியூர் சென்றிருக்கலாம் என்று நினைத்தனர். ஆனால் வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசவே, காவல் நிலையத்திற்கு சென்று பக்கத்து வீட்டுக்காரர்கள் தகவல் கொடுத்தனர்.
நாகமலை புதுக்கோட்டை காவல்நிலைய காவல்துறை அதிகாரிகள் வீட்டின் பூட்டை உடைத்துக்கொண்டு போய் மேலே சென்று பார்த்த போது தம்பதியர் இருவரும் சடலமாக தூக்குப் போட்டு தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு பிடித்தனர். மொட்டைமாடியில் இருவரின் சடலங்களும் அழுகிய நிலையில் இருந்தது. உடலைக்கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே இது கொலையா, தற்கொலையா என்பது தெரியவரும் என்று கூறினர்.
பிள்ளை இல்லாத சோகத்தில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் கடன் பிரச்சினை கழுத்தை நெரிக்கவே தற்கொலை செய்து கொண்டதாகவும் அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். வீட்டிற்குள் சோதனை செய்த போலீசார் மரணம் தொடர்பாக பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வேங்கட சுப்ரமணியனின் செல்போனில் இருந்து கடைசியாக பேசிய எண்களை காவல்துறையினர் தொடர்பு கொண்டனர். எல்லா எண்களும் பெங்களூருக்கு சென்றுள்ளது. சுப்ரமணியனின் உறவினர்கள் கர்நாடகாவில் இருப்பதால் அவர்களை செல்போனில் தொடர்பு கொள்வது சிக்கலான காரியமாக உள்ளது. மொழி பிரச்சினையும் தமிழக காவல்துறையினரை சிக்கலுக்கு ஆளாக்கியுள்ளது.