கொரோனா நகரமாக மாறி வரும் தூங்கா நகரம் மதுரை - 5000 பேரை தொட்டது
மதுரை மாவட்டத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக இன்று ஒரே நாளில் மேலும் 335 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுரை: கொரோனா வைரஸ் பரவல் மதுரை மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக 300க்கும் மேற்பட்டோரை தொட்டு அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4674 ஆக இருந்தது. இன்று ஒரே நாளில் மேலும் 335 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் முழு லாக்டவுன் அமல் படுத்தப்பட்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்றாலும் கொரோனா கட்டுப்பட்டது போல தெரியவில்லை.
மதுரை மாவட்டத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக இன்று ஒரே நாளில் மேலும் 335 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5009 ஆயிரத்தை எட்டியுள்ளது.
கொரோனா பாதித்தவர்களுக்கு மன நோய், மூளை பாதிப்பு ஏற்பட கூடும்.. பக்க விளைவு பற்றி லண்டன் பல்கலை. ஷாக்
100 வார்டுகளில் பரிசோதனை
நோய் பரவும் வேகத்தைத் தடுக்க வீடு வீடாக காய்ச்சல் கண்டறியும் குழு, தொடர்பு கண்டறியும் குழு மற்றும் கிருமி நாசினி குழு ஆகிய மூன்று வகை குழுக்களை மதுரை மாநகராட்சி அமைத்துள்ளது. மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டு பகுதிகளில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் மட்டும் வீடு, வீடாக காய்ச்சல், சளி உள்ளிட்ட கொரோனா தொற்று கண்டறியும் குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்படுகிறது.
காய்ச்சல் கண்டறியும் குழு
கொரோனா தொற்று கையை மீறி சென்றுவிட்டதால் 100 வார்டுகளிலும் மாநகராட்சி கவனம் செலுத்த வேண்டிய உள்ளது. 100 வார்டுகளிலும் உள்ள சுமார் 4 லட்சம் வீடுகளில் காய்ச்சல் குறித்து கணக்கெடுப்பு மேற்கொள்ள 1400 களப்பணியாளர்கள் கொண்ட காய்ச்சல் கண்டறியும் குழுக்களை மாநகராட்சி அமைத்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த ஜூலை 12ஆம் தேதி வரைக்கும் முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.
மதுரைக்கு 4வது இடம்
ஒருபுறம் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு செல்பவர்களின் எண்ணிக்கையில் மதுரை 4வது இடத்தில் உள்ளது. 24.6 சதவிகிதம் பேர்தான் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
டிஸ்சார்ஜ் எத்தனை பேர்
மாவட்டத்தில் இதுவரை 1,111 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை 3,821 பேர் நோய் பாதிப்புடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 77 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே 300 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. கொரோனாவைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த மாஸ்க் பரோட்டா, கொரோனா தோசை, கொரோனா போண்டா எல்லாம் போட்டாலும் கவலைப்படாமல் வீதிகளில் சுற்றிக்கொண்டுதான் இருக்கின்றனர்.