தேர்தல் ஆணையம் தில்லுமுல்லு ஆணையமாக செயல்படுகிறது.. சிபிஎம் சரமாரி குற்றச்சாட்டு
மதுரை: தேர்தல் ஆணையம் தில்லுமுல்லு ஆணையமாக செயல்படுகிறது என மார்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் 18ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் 46 வாக்குச்சாவடிகளில் தவறு நடந்துள்ளது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அந்த வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படலாம் என கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசினார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலையை எதிர்த்து தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
தில்லுமுல்லு ஆணையம்
அப்போது தேர்தல் ஆணையமே தில்லுமுல்லு ஆணையமாக செயல்படுகிறது. வாக்கு எண்ணிக்கையின் போது தமிழகத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற சூழ்நிலை நிலவுகிறது.
சிறப்பு பார்வையாளர் தேவை
இதனால் வாக்கு எண்ணிக்கை வரை தமிழகத்திற்கு சிறப்பு பார்வையாளர் தேவை. 46 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறலாம் என கூறிவிட்டு 13 வாக்குச்சாவடிகளுக்கு மட்டும் மறு தேர்தல் அறிவித்தது ஏன்?
ஜனநாயக படுகொலை
தேர்தல் அதிகாரிகளின் செயல்பாடு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அதிமுக பல முறைகேடுகளை செய்து வருகிறது. ஜனநாயக படுகொலையில் ஆளும் அதிமுக அரசு செய்து வருகிறது.
நிச்சயம் ஆட்சி மாற்றம்
தேர்தல் நியாமாக சுமூகமகா நடந்தால் அதிமுக படுதோல்வி அடையும் தமிழகத்தில் நிச்சயம் ஆட்சிமாற்றம் ஏற்படும். பேரவைத் தலைவரின் செயல்பாடு உள்நோக்கம் கொண்டதாக உள்ளது.
உயர்மட்டக்குழு விசாரணை
மதுரை அரசு மருத்துவமனையில் மின் தடையால் 5 நோயாளிகள் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. மருத்துவமனை வெண்டிலேட்டரில் இருந்த நோயாளிகள் இறந்ததற்கு மருத்துவமனை டீன் கூறும் காரணம் ஏற்புடையதாக இல்லை. நோயாளிகள் இறந்தது குறித்து உயர்மட்டக்குழு விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.