கிராமங்களைக் காப்பாத்துங்க.. மக்களுக்கு விழிப்புணர்வே இல்லை.. பாலமேட்டிலிருந்து ஒரு கோரிக்கை!
மதுரை: சென்னை போன்ற பெருநகரங்களில் மக்கள் கிட்டத்தட்ட விழிப்புணர்வுடன் உள்ளனர். ஆனால் மதுரை உள்ளிட்ட பல மாவட்ட கிராமப்புற மக்களுக்கு கொரோனாவைரஸ் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை. இது பெரும் கவலைக்குரியதாக மாறியுள்ளது.
மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை கிராமப் பகுதிகள் அதிகம். மதுரை நகரிலேயே போதிய விழிப்புணர்வு இல்லாமல் வண்டியை எடுத்துக் கொண்டு அங்குமிங்கும் போய்க்கொண்டுதான் உள்ளனர் சிலர். அவர்களை கட்டுப்படுத்துவதிலேயே காவல்துறையினருக்கு அயர்ச்சி வந்து விடுகிறது.
சிட்டியே இப்படி இருக்கும்போது கிராமப்பகுதிகளில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. சுத்தமாக கொரோனா குறித்த விழிப்புணர்வே இல்லாமல் இருக்கிறார்கள் மக்கள். இது அதிர வைப்பதாக உள்ளது. குறிப்பாக மதுரை அலங்காநல்லூர் அருகே உள்ள பாலமேட்டு நிலை குறித்து நாம் பார்த்த ஒரு டிவீட் அதிர வைப்பதாக உள்ளது.
தமிழகத்தில் முதல் கொரோனா பலி.. எப்படி இறந்தார்?.. நோய் தாக்கிய பரபரப்பு பின்னணி!
|
பாலமேட்டு மக்கள்
ப்ரீத்தி ஜெயச்சந்திரன் என்பவர் போட்டுள்ள அந்த டிவீட்டில் இப்படி தெரிவித்துள்ளார்.. நான் அலங்காநல்லூர் அருகே உள்ள பாலமேடு கிராமத்தைச் சேர்ந்தவர். இங்கு மக்கள் வழக்கம் போல வெளியில் நடமாடிக் கொண்டுள்ளனர். யாருக்குமே கொரோனாவைரஸ் குறித்த அபாயம் தெரிந்ததாக தெரியவில்லை. உயர் அதிகாரிகள் உடனடியாக இங்கு வந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
விழிப்புணர்வு இல்லை
கிராமத்து மக்கள் வழக்கம் போல நடமாடிக் கொண்டுள்ளனர். காட்டு வேலைக்குப் போகிறவர்கள் வழக்கம் போல வேலைக்குப் போகிறார்கள். காலில் செருப்பு கூட போடுவதில்லை. திண்ணையில் உட்கார்ந்து அரட்டை அடிப்பது தொடர்கிறது. மொத்தமாக கூடி பேசுவது தொடர்கிறது. இதெல்லாம் எந்த அளவுக்கு அபாயகரமானது என்பதை மக்கள் உணரவில்லை. காரணம் அவர்களுக்கு விவரம் தெரியவில்லை. அது அவர்களின் தவறே கிடையாது.
இயல்பாக உள்ள கிராமத்தினர்
பாலமேடு மட்டுமல்ல பல கிராமங்களிலும் இதே நிலைதான். ஏதோ வைரஸ் வந்திருச்சாம்ல. நம்மளை என்ன செய்யப் போகுது என்ற அலட்சிய மனப்பான்மையில்தான் கிராமத்தினர் பலர் உள்ளனர். இதை அலட்சியம் என்று சொல்லி விட முடியாது. அது அவர்களின் வெள்ளந்தி மனசு. நம்ம மனசுக்கு எல்லாம் நல்லாதாய்யா நடக்கும்.. நீ போய் வேலையப் பாருத்தா என்றுதான் அவர்கள் இயல்பாக உள்ளனர். அவர்களுக்கு விளக்கினாலும் புரியவில்லை என்பதுதான் இங்கு கஷ்டமாக உள்ளது.
விழிப்புணர்வு ஊட்ட வேண்டும்
கிராமப்புறங்களில் அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் வீடு வீடாக போய் விழிப்புணர்வை ஏற்படுத்தியே ஆக வேண்டும். அது கட்டாயம் மட்டுமல்ல, அவசரமும் கூட. தேவைப்பட்டால் அவர்களுக்கு நல்ல எச்சரிக்கை கொடுத்து வீட்டுக்குள் முடங்கியிருக்கச் சொல்ல வேண்டும். நகரவாசிகளுக்கு ஓரளவுக்கு இதன் அபாயம் புரிந்த அளவு கூட கிராமப்புற மக்களுக்கு இதில் விவரம் தெரியவில்லை. எனவே அவர்கள் மீதுதான் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டியுள்ளது.
நடவடிக்கை தேவை
மாவட்ட நிர்வாகம், காவல்துறை, சுகாதாரத் துறை என அனைவரும் இதில் களம் இறங்க வேண்டும். அதேபோல படித்தவர்களும் கூட கிராம மக்களுக்கு இதுகுறித்துப் புரிய வைக்க வேண்டும். இதில் ஏதாவது சீக்கிரம் நடவடிக்கை எடுத்தால் நல்லது. காரணம் காலம் கடந்த பின்னர் எதையும் செய்வதில் பலன் இருக்காது என்பதால் இதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.