மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பெயரை சூட்டுக… மீண்டும் போராட்டம்
மதுரை: மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பெயரை சூட்டக்கோரி, தேவர் அமைப்பினர் மதுரை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பெயர் சூட்ட வேண்டும். டிஎன்டி ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு தேவர் அமைப்புகள் சார்பில் மதுரை மாநகரில் பல்வேறு கட்ட போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், கடந்த மாதம் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள தேவர் சிலை முன்பு, நூற்றுக்கணக்கானோர் ஒன்று திரண்டு சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது 200க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், தொடர்ந்து அடுத்தடுத்த கட்ட போராட்டங்களை தாங்கள் நடத்த போவதாக மூவேந்தர் முன்னேற்ற கழகம் மற்றும் பார்வர்டு பிளாஃக் கட்சி உள்ளிட்ட தேவர் அமைப்புகள் தெரிவித்திருந்தன.
கோட்டையை பிடிக்க கோதாவில் குதித்த திமுக.. 3 சென்னையிலும் போட்டி!
இந்நிலையில் இன்று மதுரை ரயில் நிலையம் முன்பாக பார்வர்டு பிளாஃக் கட்சி, தென் இந்திய பார்வர்டு பிளாஃக் கட்சி போன்ற தேவர் சம்பந்தப்பட்ட அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்த துவங்கினர்.
இவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ரயில் நிலையத்திற்குள் முயன்று ரயிலை மறித்து போராட்டம் நடத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் ரயில் மறியலில் ஈடுபடும் அவர்களை தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் பல அமைப்புகள், முற்றுகைப் போராட்டத்தில் வரக்கூடும் என்பதால் 300-க்கும் மேற்பட்ட போலீசார் தொடர்ந்து ரயில் நிலையம் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கிடையே, தேவர் அமைப்புகளின் தலைவர்களை தற்சமயம் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.