மதுரையில் அமித்ஷாவை ஒரே நாளில் 2 முறை சந்தித்த ஓபிஎஸ்... என்னவாக இருக்கும்?
மதுரை:தமிழகம் வந்துள்ள பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார். அதுவும் ஒரே நாளில் இருமுறை அவரை ஓ. பன்னீர்செல்வம் சந்தித்து பேசியிருப்பது அரசியல் வட்டாரங்களில் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு பாஜக தலைவர் அமித்ஷா பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து கட்சியினருடன் முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக அவர் இன்று தமிழகம் வந்துள்ளார்.
விமானம் மூலம் மதுரை வந்த அவர்... லோக்சபா தேர்தல் தொடர்பாக.. 18 தொகுதி பொறுப்பாளர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டத்தில் எதிர்வரும் லோக்சபா தேர்தலை எவ்வாறு எதிர் கொள்வது, மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது.
கூட்டம் முடிந்த பின்... அவர் மதுரை விமான நிலையம் அமித் ஷா வந்தார். அதே தருணத்தில் சென்னையில் இருந்து விமானம் மூலம் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மதுரை வந்தார்.
அமித்ஷா வருகையை அறிந்த அவர், விமான நிலையத்தில் சந்தித்தார். அவருடன் அமைச்சர் தங்கமணியும் உடனிருந்தார். இந்த சந்திப்பின் போது, லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்தும், வியூகங்கள் குறித்தும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
தேமுதிகவுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு தொடர்பாக ஆலோசனைகளை அமித்ஷா வழங்கியதாகவும் கூறப்படுகிறது. தவிர... எதிர் வரும் தேர்தலுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் விவாதிக்கப் பட்டதாக கூறப்படுகிறது.
அதன் பின்னர் ராமநாதபுரம் சென்ற அமித்ஷா பாஜக பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் அவர் மீண்டும் மதுரை வந்தார்.
அப்போது, அமித்ஷாவை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது அவருடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலு மணி ஆகியோர் உடனிருந்தனர்.
லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இரு தரப்பும் ஆலோசித்ததாக தெரிகிறது. விஜயகாந்த் பாஜக, அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.