திமுகவினர் 10 ஆண்டுகளாக காய்ந்து போய் இருக்கிறார்கள்... ஆட்சியை கொடுத்து விட வேண்டாம் - ஓபிஎஸ்
திமுகவினரிடம் ஆட்சியை ஒப்படைத்தால் காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் விழுந்த மாதிரி மேய்ந்து விடுவார்கள் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
மதுரை: திமுகவினர் கடந்த பத்தாண்டு காலமாக ஆட்சியில் இல்லை. அவர்களின் கைகள் பரபரவென்று என்று இருக்கின்றன. அவர்கள் கையில் தப்பித்தவறி ஆட்சியை ஒப்படைத்தால் அவ்வளவுதான் காய்ந்த மாடு கம்மங்கொல்லையில் விழுந்தது போல பாய்ந்து மேய்ந்து விடுவார்கள் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். டி.குண்ணத்தூரில் நடைபெற்ற எம்ஜிஆர், ஜெயலலிதா கோவில் திறப்புவிழாவில் பேசிய ஓ.பன்னீர் செல்வம் இதனை தெரிவித்துள்ளார்.
மதுரை, திருமங்கலம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட டி.குன்னத்தூரில் சுமார் 12 ஏக்கரில் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. தமிழக வருவாய்த்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டின் பேரில் ஜெயலலிதா பேரவை மற்றும் அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர். ஜெயலலிதாவுக்கு பிரம்மாண்டமாக கோவில் கட்டப்பட்டுள்ளது.
இந்த கோவில் திறப்பு விழா இன்று மதியம் 1 மணியளவில் நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கோவில் கும்பாபிஷேகம், சிலை திறப்பு விழாவில் பங்கேற்றனர்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரிப்பன் வெட்டி கோவிலை பக்தர்கள் பயன்பாட்டுக்கு முறைப்படி துவங்கி வைத்தார். இதில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் பங்கேற்றனர். மதுரையில் சித்திரை மாதம் நடைபெறும் சித்திரை திருவிழா தை மாதம் நடைபெற்றது போல கூட்டம் அலை மோதியது.
கோவில் திறப்புவிழாவை முன்னிட்டு கடந்த 3 நாட்களாகவே யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. 108 பசுக்கள் கன்றுகளுடன் கோ பூஜை நடைபெற்றது. இதனையடுத்து 234 சட்டசபை தொகுதிகளை குறிக்கும் வகையில் மூத்த அதிமுக நிர்வாகிகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் பொற்கிழி தரப்பட்டது.
இந்தக் கோவில் திறப்பு விழாவில் பேசிய துணைமுதல்வர் ஓ.பி.எஸ், திமுக தலைவர் மு.க ஸ்டாலினை கடுமையாக சாடினார். ஆட்சியைப் பிடிக்க சிலர் வேலை கையில் பிடித்து வருகிறார்கள். வேலை பிடித்தாலும், ஆளை பிடித்தாலும் ஆட்சியை மட்டும் பிடிக்கமுடியாது என்று விமர்சித்தார்.
பத்தாண்டு காலமாக திமுக ஆட்சியில் இல்லை. அவர்களின் கைகள் எல்லாம் பரபரப்பாக இருக்கிறது. காய்ந்து போயிருக்கும் அவர்கள் கையில் ஆட்சி கிடைத்தால் அவ்வளவுதான் காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் விழுந்தது போல மேய்ந்து விடுவார்கள் என்று சொன்னார் ஓபிஎஸ்.
வேண்டா வெறுப்பாய் பிள்ளையை பெற்று காண்டா மிருகம் என்று பெயர் வைத்த கதையாக ஸ்டாலின் விழித்துக்கொண்டிருக்கிறார். எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வந்து விட வேண்டும் என்று கனவு காண்கிறார் அவரது கனவு பலிக்காது என்றும் சொன்னார்.