சங்கராபுரம் ஊராட்சி தேர்தல்.. தேவி மாங்குடியின் வெற்றிச் சான்றிதழே செல்லும்.. ஹைகோர்ட் அதிரடி
மதுரை: சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவராக பிரியதர்ஷினி வெற்றிபெற்றது செல்லாது என்றும் முதலாவது வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட தேவியே வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த சாக்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்டது சங்கராபுரம் ஊராட்சி. இங்கு ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் தேவி மாங்குடி மற்றும் பிரியதர்ஷினி அய்யப்பன் ஆகியோர் வெற்றிபெற்றதாக 2 வெற்றிச் சான்றிதழ்கள் தனித்தனியாக தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டன. முதலில் தேவிக்கு வழங்கப்பட்டநிலையில் இரண்டாவதாக பிரியதர்ஷினிக்கு வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதை எதிர்த்து தேவி மாங்குடி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், ஊரக உள்ளாட்சி தேர்தலில், சங்கராபுரம் ஊராட்சித் தலைவர் பதவிக்கு தான் போட்டியிட்டதாகவும், தனக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டதாகவும், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பிரியதர்ஷினி என்பவருக்கு பூட்டு சாவி சின்னம் ஒதுக்கப்பட்டதாகவும் கூறினார்.
மேலும் தனது மனுவில் வாக்குப்பதிவு முடிந்து, வாக்கு எண்ணிக்கையின் போது ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்ட நான் வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலர் அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் தனக்கு வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்ட சிறிது நேரத்தில்,பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிட்ட பிரியதர்ஷினியும் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். எனவே பிரியதர்ஷினி ஊராட்சித் தலைவராகப் பதவியேற்க தடைவிதித்து உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, சங்கராபுரம் ஊராட்சித் தலைவராக பிரியதர்ஷினி பதவியேற்க இடைக்காலத்தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணை நடந்து முடிந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
டிஎன்பிஎஸ்சி மோசடி வழக்கில் அதிரடி திருப்பம்.. இடைத்தரகர் ஜெயக்குமார் நீதிமன்றத்தில் சரண்
இந்நிலையில் சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவராக பிரியதர்ஷினி வெற்றி பெற்றது செல்லாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று தீர்ப்பளித்துள்ளது. அதேசமயம், முதலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட தேவியின் வெற்றியே செல்லும் என்று நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது.