அரசியல் நிலைமை சரியில்லை.. யார் வெல்லுவார்கள் என்று கணிப்பது கடினம் தான்... ராம்தேவ் கருத்து
Recommended Video
மதுரை: நாட்டின் அரசியல் நிலைமை தற்போது சிக்கலானதாக இருப்பதால், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று கணிப்பது கடினம் என்று யோகா குரு ராம்தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இப்போது அரசியல் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. 2019 ல் யார் வெல்வார்கள் என்று எதுவும் சொல்ல முடியாது. ஆனால் கடுமையான போட்டியாக தான் இருக்கும் என்றும் கூறினார்.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க. தோல்வியை தழுவ, காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. அதே நேரம், மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணியிடம் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், ராம்தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.
எதிர்ப்பு இல்லை
அடுத்தாண்டு நடக்க உள்ள லோக் சபா தேர்தலில் எந்தவொரு கட்சியையும் ஆதரிக்கவோ அல்லது எதிர்க்கவோ மாட்டேன் என்று யோகா குரு ராம்தேவ் தெரிவித்துள்ளார். மேலும், நான் அரசியலில் கவனம் செலுத்தவில்லை எனவும் விளக்கமளித்தார்.
ஆன்மீக நாடு
நாங்கள் ஒரு அரசியல் கட்சியோ அல்லது மத செயல்திட்டத்தை வைத்தோ இருக்கவில்லை. அதே சமயம், ஆன்மீக நாடு மற்றும் ஆன்மீக உலகத்தை உருவாக்க விரும்புகிறோம். யோகா மற்றும் வேத நடைமுறைகளால் ஒரு தெய்வீகமான, வளமான மற்றும் ஆன்மீக இந்தியாவை உருவாக்கி வருகிறோம் என்றும் தெரிவித்தார்.
பாஜக ஆதரவு
2014- ல் பாஜகவை ராம்தேவ் (52) ஆதரித்தார். பின்னர், ஒரு வருடம் கழித்து அவர் ஹரியானாவின் வர்த்தக தூதராக நியமிக்கப்பட்டார். அவருக்கு ஒரு கார், பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் எஸ்கார்ட் வாகனம் ஆகியவை கொடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியலில் இல்லை
அரசியலில் இருந்து விலகி இருப்பதாக ராம்தேவ் கூறுவது இது முதல் முறை இல்லை. ஏற்கனவே, தனியார் ஆங்கில செய்திநிறுவன பேட்டியின் போது, பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வீர்களா என கேட்டப்போது, நான் ஏன் பிரச்சாரம் பண்ண வேண்டும் என்று பதிலாக அளித்தார். மேலும், நான் அரசியல் ரீதியாக விலகிவிட்டேன், நான் எல்லா கட்சிகளுடனும் இருக்கிறேன், நான் எந்த கட்சியுடனும் இல்லை என்றும் கூறினார்.