சிலம்பத்தில் சீறும் சிறுவன் அதீஸ்ராம்.. மலேசியாவில் தங்கம் வென்ற "தங்கமகனுக்கு" ஆட்சியர் விருது
மதுரை: சிலம்பத்தில் தங்கப்பதக்கம் வென்ற 10 வயது சிறுவனுக்கு நேற்று நடந்த குடியரசுத் தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் விருது வழங்கினார்.
மதுரை விராட்டிபத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் ஜெ. அதீஸ்ராம் (10). இவர் கேரன் பப்ளிக் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வருகிறார்.
இவர் சிலம்ப போட்டியில் கைதேர்ந்து வருகிறார். 10 வயதான அதீஸ்ராம் சிலம்பத்தில் சீறுவது பெரும் வியப்பை ஏற்படுத்துகிறது. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதற்கேற்ப இந்த சிறுவன் கடல் தாண்டி போய் சாதனை படைத்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-15 ஆகிய தேதிகளில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற சர்வதேச சிலம்ப போட்டியில் கலந்து கொண்ட அதீஸ்ராம் தங்கப் பதக்கம் வென்றனர் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். அது போல் கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17-19 ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் பங்கேற்று முதல் பரிசு பெற்று தங்க பதக்கம் (1st Y.S.C.D.F National Games 2018-19) வென்றுள்ளார்.
2020 National Sports & Physical Fitness Board "International Sports Star Award" விருதை ஜெ.அதீஸ்ராம் வென்றுள்ளார். இத்தனை சாதனைகளை படைத்த அதீஸ்ராமுக்கு குடியரசு தினத்தன்று மாவட்ட ஆட்சியர் அன்பழகன் விருதையும் சான்றிதழையும் வழங்கி கவுரவித்தார்.