மதுரை மத்திய தொகுதி தேமுதிக முன்னாள் எம்எல்ஏ காலமானார்
மதுரை மத்திய தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரராஜன் காலமானார்.
மதுரை: விஜயகாந்தின் நண்பரும் மதுரை மத்திய தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவுமான சுந்தரராஜன் இன்று உடல்நலக்குறைவினால் காலமானார். தேமுதிமுகவின் பொருளாராக பதவி வகித்தவர். கடந்த 2011ஆம் ஆண்டு மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக சட்டசபைக்கு சென்றவர். பின்னர் தேமுதிகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.
மதுரையில் பிறந்த சுந்தரராஜன். 10வது வகுப்பு வரை படித்துள்ளார். திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ளனர். விஜயகாந்த்தின் ஆரம்ப கால நண்பர். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக உடன் இருந்தவர். ஜோதிடத்திலும் நல்ல புலமை உண்டு இவருக்கு.
விஜயகாந்த் அரசியல் பிரவேசம் மேற்கொண்டபோது கூடவே இவருக்கும் முக்கியப் பொறுப்புகொடுத்து, மதுரை மத்திய தொகுதியிலும் வேட்பாளராக நிறுத்தினார். மதுரை மத்திய தொகுதிக்குள்தான் விஜயகாந்த்தின் வீடு உள்ளது என்பதால் சுந்தரராஜனின் வெற்றியை தனது வெற்றியாக கருதி தீவிரப் பிரசாரம் செய்தவர் விஜயகாந்த்.
விஜயகாந்திற்கு நெருங்கிய நண்பராக இருந்ததோடு மட்டுமல்லாது விஜயகாந்த் பிரேமலதா திருமணம் நடைபெற காரணமாக இருந்தவர். பின்னர் தேமுதிகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார் சுந்தரராஜன். கடந்த விஜயகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த போது அவரை சந்திக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக கூறினார். கடைசி வரை சந்திக்கவேயில்லை.
இப்ராஹிம் ராவுத்தர், சுந்தரராஜன் ஆகியோர்தான் ஒருகாலத்தில் விஜயகாந்த்துக்கு மிக நெருக்கமான நண்பர்களாக இருந்தவர்கள். இப்போது இரண்டு நண்பர்களுமே இல்லை.