திமுகவால் ஆட்சிக்கு வர முடியாது.. மக்கள் வெறுப்பில் இருக்கிறார்கள்.. ஓ.பி.எஸ் சொல்கிறார்
மதுரை: அராஜகத்தில் ஈடுபடும் திமுக மீது மக்கள் வெறுப்பில் உள்ளதாகவும், அவர்கள் ஆட்சிக்கு வர முடியாது என்றும் தேர்தல் பிரச்சாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
22 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள், தமிழகத்தின் ஆட்சியாளர்களை முடிவு செய்யும் என்ற அளவில் உள்ளது. ஆனால், ஆட்சியை தக்க வைக்க ஆளும்கட்சியினர் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றனர்.
காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் வருகிற 19 ஆம் தேதி நடைபெறவிருக்கின்றன. இதனையொட்டி, அரசியல் கட்சியினர் வீடு, வீடாக சென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கனவு ஒரு போதும் பலிக்காது
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து பெரிய ஆலங்குளத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு அ.தி.மு.க. ஆட்சி காணாமல் போய் விடும், ஆட்சி கலைந்து விடும் என்று எதிர்க்கட்சிகள் கனவு கண்டுக் கொண்டிருக்கிறார்கள் அவர்களது கனவு ஒரு போதும் பலிக்காது என்று பேசினார்.
எண்ணிப் பார்க்க வேண்டும்
இதற்கு முன்னாடி தமிழகத்தை பல்வேறு கட்சிகள் ஆட்சி செய்துள்ளது. யார் நல்லாட்சி தந்து, நல்ல நல்ல திட்டங்களை கொண்டு வந்தார்கள், யார் மக்களுக்கு தேவையான, பல்நோக்கு திட்டங்களை தந்தார்கள் என்று எண்ணிப் பார்க்க வேண்டும் என்றார்.
சிறப்பு இருக்கிறது
28 ஆண்டுகளாக, பெரியோர்கள், தாய்மார்கள், இளைஞர்கள் என அனைவரின் ஆதரவோடு ஆளுகின்ற ஒரே கட்சியாக அ.தி.மு.க. திகழ்கிறது. தி.மு.க. ஆட்சியில் 2006 முதல் 2011 வரைக்கும் எத்தனை திட்டத்தை கொண்டுவந்தார்கள், எந்த திட்டத்தை முடித்தார்கள் என்று வாக்கு சேகரிக்க வரும் தி.மு.க.காரர்களிடம் கேளுங்கள் என்று கிண்டலாக கூறினார்.
வெறுப்பில் உள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பல திட்டங்களை போட்டு, முதல்வராக கனவு கண்டுக் கொண்டிருக்கிறார், ஆனால் அவரால் முடியுமா? முடியாது. ஏனென்றால் மக்கள் அனைவரும் திமுக கட்சியின் மீது வெறுப்பில் உள்ளனர். தி.மு.க. அராஜகத்தில் ஈடுபடுவதால் மக்கள் கடுமையான அதிருப்தியில் உள்ளார்கள். இதையெல்லாம் கருத்தில் கொண்டு அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.