திமுக அரசை ‛டிஸ்மிஸ்’ செய்யுங்க.. கொதித்துப்போன செல்லூர் ராஜூ.. என்ன சொல்லியிருக்காரு பாருங்க!
மதுரை: தமிழ்நாட்டில் பெண் காவலருக்கே பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. இதனால் தமிழ்நாடு அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். திமுக ஆட்சியில் தமிழ்நாடு மக்கள் துன்பத்தில் இருக்கின்றனர். திருந்தாத உள்ளங்கள் இருந்து என்ன லாபம்? என மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கொந்தளித்தார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆாின் 106வது பிறந்தநாளை முன்னிட்டு மாநிலம் முழுவதும் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. மதுரை ஆறுமுச்சந்தியில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு பேசினார். அப்போது எம்ஜிஆரை புகழ்ந்து பேசிய செல்லூர் ராஜூ, திமுகவை கடுமையாக சாடினார். இதுதொடர்பாக செல்லூர் ராஜூ பேசியதாவது:
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. காங். வேட்பாளராக சஞ்சய் இளங்கோவன்.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு?
எம்ஜிஆர் போன்ற தலைவர் வரமுடியாது
எம்ஜிஆர் மறைந்து 36 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்றும் கூட மக்கள் எம்ஜிஆரை மக்கள் நினைக்கின்றனர். எம்ஜிஆரை போன்ற தலைவர் இனி வரமுடியாது. எம்ஜிஆர் போன்ற நபர் இன்று யாரும் இல்லை. ஏழைகள் மட்டுமின்றி கட்சி பாகுபாடின்றி உதவி செய்தவர் தான் எம்ஜிஆர்.
36 ஆண்டுகளுக்கு பிறகும் புகழ்ச்சி
யூடியூப்பில் ஒரு வீடியோ ஒன்றை பார்த்தேன். கொடிகாத்த குமரனின் மரணமடைந்த பிறகு அவரது குடும்பத்தினரை யாரும் பார்க்கவில்லை. காந்தி பார்த்த பிறகு தான் காங்கிரஸ் கட்சியினர் அவரை பார்த்தனர். இதுதான் காங்கிரஸ் கட்சியின் அழிவுக்கு காரணம்.முதல்வராக இருந்த எம்ஜிஆர் அவரை பார்த்து கனிவோடு கேட்டு மாதம் ரூ.1000 கிடைக்க வழிசெய்தார். அதேபோல் கக்கனை நேரில் சென்று பார்த்து உதவிக்கரம் நீட்டியவர் எம்ஜிஆர். இப்படி மனிதநேயமிக்க மனிதராக இருந்ததால் தான் எம்ஜிஆரை 36 ஆண்டுகள் கழித்தும் நாம் அனைவரும் புகழ்ந்து வருகிறோம்.
மின்கட்டணம் 6 சதவீதம் உயர்வு
மக்களுக்கான திட்டங்களை அதிமுக விலையில்லா மக்கள் நல திட்டம் என்று கூறியது. ஆனால், திமுக அரசின் மக்கள் நல திட்டங்களை இலவசம் எனக் கூறி மக்களை அவமானப்படுத்துகின்றனர். அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வந்த நல திட்டங்களை திமுக நிறுத்திவிட்டது. அவர்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதியான மகளிர் உரிமைத்தொகையையும் இன்னும் கொடுக்கவில்லை. அரசு ஊழியர்களுக்கு திமுக தலைமையிலான அரசு அல்வா கொடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் மின்கட்டணம் ஆண்டுக்கு ஒருமுறை 6 சதவீதம் வரை உயர போகிறது. இதற்கான அனுமதியை மத்திய அரசின் மின்சார வாரியம் வழங்கியுள்ளது
டிஸ்மிஸ் செய்யணும்
தமிழ்நாட்டில் பெண் காவலருக்கே பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. இதனால் தமிழ்நாடு அரசை டிஸ்மிஸ் செய்யலாம். திமுக ஆட்சியில் தமிழ்நாடு மக்கள் துன்பத்தில் இருக்கின்றனர். திருந்தாத உள்ளங்கள் இருந்து என்ன லாபம்? திமுக ஆட்சியில் இருந்தும் மக்களுக்கு என்ன லாபம் கிடைத்துள்ளது'' என அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.