இ-பாஸ் மூலம் ஒரு பிரயோஜனமும் இல்லை... மக்களை அலைக்கழிக்கத்தான் இது பயன்படுகிறது -சரவணன் எம்.எல்.ஏ
மதுரை: இ-பாஸ் மூலம் ஒரு பிரயோஜனமும் இல்லை என்றும் மக்களை அலைக்கழிக்கத்தான் இது பயன்படுகிறது எனவும் திமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன் விமர்சித்துள்ளார்.
வெறும் வார்த்தைகளில் மட்டுமல்லாமல் எல்லா மாவட்டங்களிலும் ஆயுஷ் மையங்களை அமைக்க அரசு முன் வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
நல்ல விசயங்களை தாமதம் செய்யக்கூடாது... அயோத்தி பூமி பூஜையில் கம்பராமாயணத்தை குறிப்பிட்ட மோடி
70 ஆலோசனைகள்
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இதுவரை 70க்கும் மேற்பட்ட கொரோனாவுக்கான ஆலோசனைகளை வழங்கியுள்ளார். ஆனால் அதனை அரசியல் காரணங்களுக்காக ஏற்காமல் ஆளும் அரசு செயல்படுவதால் தமிழக மக்களுக்குத் தான் இன்னல் ஏற்படுகிறது. சென்னையை அடுத்து மதுரை ஹாட்ஸ்பாட்டாக மாறி வரும் நிலையில் ஆய்வுப் பணிக்காக மாண்புமிகு முதல்வர் அவர்கள் மதுரை வரும் இந்த வேளையில் அவரது கவனத்திற்கு நான் சில விஷயங்களை கொண்டு வர விழைகிறேன்.
ஆண்டிஜென் டெஸ்ட்
ஒருவருக்கு நோய்தொற்றை உறுதிப்படுத்த சில பரிசோதனைகளை எடுக்க வேண்டும். Rt-PCR தான் "கோல்டு ஸ்டான்டர்டு" என்பதில் மாற்றுக்கருத்து மருத்துவ உலகில் இல்லை. ஆயினும் 7½ கோடி ஜனத்தொகை உள்ள தமிழகத்தில் சில கோடி பேரையாவது பரிசோதனை செய்ய வேண்டாமா? "ரேபிட் ஆன்டிஜென் ஆண்டிபாடி டெஸ்ட்" என்பது ஐ.சி.எம்.ஆர் அங்கீகாரம் பெற்றது, செலவு குறைவு, கண்டுபிடிக்கும் நேரம் குறைவு, பல லட்சம் பேருக்கு ஒரே நாளில் பரிசோதனை செய்ய முடியும்.
ஆயுஷ் மையங்கள்
கொரோனா தொற்று சிகிச்சைக்கு மிக முக்கியமான மருந்துகள் OXYGEN, REMDISIVIR, TOCILIZUMAB, FAVIPIRAVIR தமிழகத்தில் மிகவும் தட்டுப்பாடாக இருக்கிறது. இதனைப் போக்கும் வண்ணம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அலோபதி சிகிச்சைப் போல AYUSH சிகிச்சையையும் கொரோனா தொற்று கட்டுப்படுத்தலில் பயன்படுத்த வேண்டும். வெறும் வார்த்தைகளில் இல்லாமல் எல்லா மாவட்டங்களிலும் AYUSH மையங்களை அமைக்க அரசு முன் வர வேண்டும்.
சினிமா பிரபலங்கள்
எல்லாவற்றிற்கும் மேலாக மக்களுக்கான விழிப்புணர்வு என்பது ஒரு தொடர் நடவடிக்கை. அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் சினிமா கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், மற்றும் தொண்டு நிறுவனங்களையும் ஒன்றிணைத்து அரசு செயல்பட வேண்டும்.உலக நாடுகளில் மருத்துவத்துறையில் நமது தமிழர்கள் தான் சிறந்து விளங்குகிறார்கள். நமது தமிழகத்திலும் திறமைவாய்ந்த மருத்துவ விஞ்ஞானிகளைக் கொண்டு கொரோனா நோய்தொற்றுக்கான ஆய்வுகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
மக்கள் அலைக்கழிப்பு
நோய்தொற்று பரவாமல் தடுக்க E-PASS முறையை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். நியாயமாக பார்த்தால் E-PASS எடுக்க முதல் தகுதியே RT-PCR நெகட்டிவ்வாக இருக்க வேண்டும். அவசர காரணங்களுக்காக உடனே RT-PCR எடுக்க முடியாவிட்டால் கூட அவர்கள் போகும் ஊரிலோ, அல்லது திரும்பி வந்தவுடனோ RT-PCR பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். பிரயோஜனமாக இல்லாமல் மக்களை அலைக்கழிக்கத் தான் E-PASS பயன்படுகிறது. சில மாற்றங்களை அதில் கொண்டு வர வேண்டும்.