யார் விட்டாலும் நான் விடமாட்டேன்... கச்சேரி உண்டு... ஸ்டாலின் பகிரங்க எச்சரிக்கை
மதுரை: பெண் குழந்தைகள் பாதுகாப்பை பற்றி பேச முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எந்த தகுதியும் இல்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேசம் காட்டியுள்ளார்.
மதுரையில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் திமுகவில் இணையும் விழாவில் பேசிய அவர் இதனைக் கூறினார்.
மேலும், அரசு பெயரில் கடன் வாங்குவதும், அதனை கொள்ளையடிப்பதும் தான் அதிமுக அரசுக்கு தலையாய பணி என்றும், மக்களை பற்றி சிறிதும் கவலைப்படாத ஒரு ஆட்சி எனவும் ஸ்டாலின் விமர்சித்தார்.
பிரம்மாண்ட விழா
முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் தனது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோருடன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதற்காக அவர் மதுரையில் ஏற்பாடு செய்திருந்த பிரம்மாண்ட விழாவில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது பேசிய ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பெண் குழந்தைகள் பாதுகாப்பை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை என சாடினார். சென்னை பள்ளிக்கரணையிலும், கோவையிலும் அதிமுக பேனர் விழுந்து இரண்டு பெண்கள் உயிரிழந்த நிலையில் அவர்களுக்கு ஆளுங்கட்சி தரப்பில் இருந்து ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை என குற்றஞ்சாட்டினார்.
வழக்கு போடு
மேலும், பொள்ளாட்சியில் இளம்பெண்கள் பாதிக்கப்பட்ட விவகாரத்தை, யார் விட்டாலும் தாம் விடமாட்டேன் என்றும், ஆட்சிக்கு வந்தவுடன் அதில் தொடர்புடையவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார். யாரையும் தப்பவிட மாட்டேன் என்றும், கச்சேரியை வைத்துக்கொள்கிறேன் எனவும் ஸ்டாலின் ஆவேசம் காட்டினார். இப்படிப்பட்ட தருணத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பை பற்றி பேச அதிமுக அரசுக்கு என்ன தகுதி இருக்கிறது என வினவினார்.
இருட்டடிப்பு
பச்சைத்துண்டு போடுகிறவர்கள் எல்லோரும் விவசாயிகள் ஆகிவிட முடியாது என்றும், நானும் விவசாயி நானும் விவசாயி எனக் கூறும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கைகளில் மண் கறை படியவில்லை, ஊழல் கறைதான் படிந்திருக்கிறது என ஸ்டாலின் தெரிவித்தார். திமுக தொடர்பான செய்திகளை சில ஊடகங்கள் இருட்டடிப்பு செய்வதாக ஸ்டாலின் வேதனை தெரிவித்தார். மத்திய அரசை தட்டிக்கேட்க துணிச்சல் இல்லாத ஆட்சி அதிமுக ஆட்சி என விமர்சித்தார்.
கதை முடிகிறது
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொய்க்கதை மன்னனாக திகழ்வதாகவும், அதிமுக ஆட்சியின் கதை முடியப்போகிறது என்றும் ஸ்டாலின் விமர்சித்தார். இதுவரை முதலீட்டாளர்களை ஈர்த்த நிறுவனங்களின் பெயர்களை அரசு வெளியிடாதது ஏன் வினவிய அவர், நாள்தோறும் பொய்யான தகவலை முதல்வர் வெளியிட்டு வருவதாக கூறினார். மேலும், நேற்று திருச்செந்தூரில் முதல்வர் கூறிய குட்டிக்கதைக்கு பதிலடியாக, தோட்டக்காரனும் குரங்குகளும் என்ற தலைப்பில் ஸ்டாலின் இன்று ஒரு குட்டிக்கதை கூறினார்.