ஈகோ மோதல்..நான் பெருசா நீ பெருசா..நேருவின் தொடர் பஞ்சாயத்து.. தென் மாவட்ட திமுகவில் என்ன நடக்கிறது?
மதுரை: தென் தமிழகத்தில் திமுக மகளிரணி செயலாளரும் லோக்சபா எம்.பி.யுமான கனிமொழியின் ஆதரவாளர்களை ஓரம் கட்டு வகையில் மேலிடமே செயல்படுகிறதா? என்கிற கேள்வியுடன் புதிய பஞ்சாயத்து கிளம்பியுள்ளது.
2021 சட்டசபை தேர்தலில் எப்படியும் ஆட்சியில் அமர்ந்துவிடுவோம் என்பது திமுக மேலிடத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை. ஆனால் திமுகவுக்கு சிந்தாமல் சிதறாமல் செல்லக் கூடிய வாக்குகளை எப்படியெல்லாம் சுக்கு நூறாக சிதைப்பது என்பது எதிரணியின் வியூகம்.
அநியாயத்துக்கு அக்கப்போர்
இதற்காகவே பல்வேறு அக்கப்போர்கள் நாள்தோறும் கிளம்புகின்றன. எதிரணியினரின் வியூகத்தைவிட திமுகவுக்குள் நடக்கும் உட்கட்சி மோதல்கள் அத்தனை ரணகளமாக இருக்கிறது. எளிதாக வெல்ல வாய்ப்புள்ள தொகுதிகளில் பணபலம் , ஈகோ போன்ற காரணங்களால் திமுகவினர் அடித்துக் கொள்வதைப் பார்த்து அக்கட்சி தொண்டர்களே தலையில் அடித்து கொள்கின்றனர்.
உள்ளதும் போய்விடுமோ?
இத்துடன் ஓய்ந்திருந்தாலும் கூட திமுகவின் வாக்கு வங்கிகளில் சேதாரம் மட்டுப்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் திமுக மேலிடமே மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் உள்ளதும் போகப் போகிறதோ? என பதறுகின்றனர் கட்சியின் மூத்த தலைவர்கள். தென்மாவட்டங்களில் திமுக மேலிடப் பிரதிநிதியாக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு முகாமிட்டு உட்கட்சி பிரச்சனைகள் குறித்து பேசி பஞ்சாயத்து செய்து வருகிறார்.
கனிமொழி ஆதரவாளர்கள்?
திமுகவைப் பொறுத்தவரை மேலோட்டமாக இது ஆரோக்கியமான நடவடிக்கைதான் என தோன்றுகிறது என்கின்றனர். ஆனால் கே.என். நேருவிடம் செல்லும் பஞ்சாயத்துகளில் பெரும்பாலும் கனிமொழி எம்.பி.யின் ஆதரவாளர்கள் பெயர்கள்தான் அடிபடுகின்றன. இதனால்தான் கனிமொழி ஆதரவாளர்களை ஓரம்கட்டுகிற முயற்சியை கட்சி மேலிடமே மேற்கொள்கிறதா? என்கிற கேள்வியை திமுகவினர் முன்வைக்கின்றனர்.
தொடர் பஞ்சாயத்துகள்
கே.என். நேருவின் புதிய பஞ்சாயத்தில் மாவட்ட செயலாளர் ப்ளஸ் எம்.எல்.ஏ. ஒருவர் மீது புகார் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த பிரமுகரோ ரொம்பவும் ஆக்டிவ்வான நபர் என மக்களிடத்தில் பெயர் எடுத்தவர் இதனால் அந்த பிரமுகரை எப்படி ஓரம்கட்டுவது என தெரியாமல் நேரு அண்ட்கோ விழிபிதுங்கியதாம். இப்படி அடுக்கடுக்கான உதாரணங்களை சொல்லி புலம்புகின்றனர் தென்மாவட்ட திமுகவினர்.