என்னாது அழகிரி மகன் துரை தயாநிதி 2024-ல் மத்திய அமைச்சரா? மதுரையை மிரட்டிய பிறந்த நாள் போஸ்டர்கள்!
மதுரை: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாநகரம் முழுவதும் போஸ்டர்கள் அதகளப்படுத்தி வருகின்றன. இந்த போஸ்டர்களில் இடம்பெற்று வாசகங்கள் அரசியல் கட்சியினரை அதிர வைக்கின்றன.
மத்திய அமைச்சராகவும் திமுகவின் தென் மண்டல அமைப்புச் செயலாளராகவும் இருந்தார் மு.க. அழகிரி. 2014-ம் ஆண்டு அவரது தந்தை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
இது செம்ம ட்விஸ்ட்.. திமுகவினரை மெர்சலாக்கிய அழகிரி ஆதரவாளர்களின் கருணாநிதி பிறந்த நாள் போஸ்டர்கள்!
அழகிரி மவுனம்
இதன்பின்னர் கருணாநிதி உயிரோடு இருந்த காலத்திலும் அவரது மறைவுக்குப் பின்னரும் மு.க.அழகிரி திமுகவில் சேருவதற்கான சில முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் திமுகவில் அழகிரி சேர்த்துக் கொள்ளப்படவில்லை. கடந்த ஆண்டு சட்டசபை தேர்தலின் போது அழகிரி தனிக் கட்சி தொடங்குவார் எனவும் கூறப்பட்டது. ஆனால் அழகிரி மவுனமாக இருந்துவிட்டார்.
அழகிரி- ஸ்டாலின் சந்திப்பு இல்லை
பின்னர் சட்டசபை தேர்தலில் திமுக வென்று 10 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியை கைப்பற்றியது. அது முதல் திமுக தலைமையுடன் இணக்கமாக போக்கில்தான் மு.க. அழகிரி குடும்பம் இருந்து வருகிறது. அதேநேரத்தில் மதுரைக்கு அடிக்கடி செல்லும் முதல்வர் ஸ்டாலின், அழகிரியை சந்திக்கவில்லை. இருவரது சந்திப்பு தொடர்பாக பல்வேறு யூகங்கள் வெளியான போதும் அதுபோல் எதுவும் நடைபெறவில்லை. முதல்வர் ஸ்டாலினும் அழகிரியும் குடும்ப நிகழ்ச்சிகளில் கூட நேரடியாக சந்தித்து பேசாமல் தவிர்த்தும் வருகின்றனர்.
துரை பிறந்த நாள்
இந்நிலையில் மு.க.அழகிரி மகன் துரை தயாநிதி பிறந்த நாளை அவரது ஆதரவாளர்கள் அமர்க்களமாக இன்று கொண்டாடி வருகின்றனர். துரை தயாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு வழக்கம் போல மதுரை மாநகரமெங்கும் சுவரொட்டிகளால் அதகளப்படுத்திவிட்டனர் ஆதரவாளர்கள். அதில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் பெரும் சலசலப்பையும் அதிருப்தியையும் சேர்த்தே கிளப்பிவிட்டிருக்கின்றன.
நாளைய மத்திய அமைச்சர்
அந்த சுவரொட்டிகளில் ஒன்றில், 2024-ல் மத்திய அமைச்சரே! என துரை தயாநிதிக்கு பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை முன்வைத்து திமுகவினர் தீவிர விவாதங்களை நடத்தி வருகின்றனர். 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்னர், அழகிரி திமுகவில் மீண்டும் சேர்க்கப்படலாம்; அவரது மகனுக்கு ஒரு தொகுதி வழங்கப்படலாம் என பேசி முடித்துவிட்டார்களோ என்னவோ என்கிற கிசுகிசுப்பும் நம் காதில் வந்து விழுந்தன.