பயம் உங்க பயோடேட்டாவுலயே இல்லையா.. பார்த்தாலே தெரியுது.. எதிர் சேவலை இறக்கிய பாஜக.. போஸ்டர் யுத்தம்!
மதுரை: அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரத்தை மையமாக வைத்து மதுரையில் திமுக - பாஜகவினர் இடையே போஸ்டர் யுத்தம் வெடித்துள்ளது. "பயம் எங்க பயோ டேட்டாலயே கிடையாது" என திமுகவினர் ஒட்டிய போஸ்டருக்கு எதிர் சேவலை களமிறக்கியுள்ளனர் மதுரை பாஜகவினர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி பண பரிவர்த்தனை மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜி மீதான கைது நடவடிக்கையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக கண்டித்துள்ளார். திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் கண்டித்துள்ளனர். அதே நேரத்தில் செந்தில் பாலாஜி கைதை அதிமுக மற்றும் பாஜக வரவேற்றுள்ளது.

செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் பாஜக மற்றும் அதிமுகவை கடுமையாக விமர்சித்தும், பாஜகவை கடுமையாக எச்சரித்தும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அதற்கு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பதிலடியாக ஒரு வீடியோவில் பேசி நேற்று வெளியிட்டார்.
மறுபக்கம், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் நேரடியாக மிரட்டல் விடுத்துள்ளார், மிரட்டுவது ஒரு முதல்வருக்கு அழகா? பாஜகவினர் மீது கை வைக்கட்டும் பார்க்கலாம். நிலைமை கைமீறினால் கோட்டையை முற்றுகையிடுவோம் என எச்சரிக்கை விடுத்தார்.
செந்தில் பாலாஜி கைது விவகாரத்தால் தமிழ்நாட்டில் திமுக - பாஜக - அதிமுக என மோதல் சூழல் உருவாகியுள்ளது. பாஜக அதிமுகவினரும், திமுகவினரும் சமூக வலைதளங்களில் கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, இருவேறு விவகாரங்களில் பாஜக நிர்வாகி எஸ்.ஜி.சூர்யா மற்றும் அதிமுக நிர்வாகி கௌதம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மதுரையில் பாஜகவுக்கு எச்சரிக்கை விடுத்து திமுகவினரும், திமுகவினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜகவினரும் மதுரையில் போஸ்டர் யுத்தத்தை தொடங்கியுள்ளனர். போஸ்டர், பேனர் சண்டைகளுக்கு பெயர் போன மதுரையில் திமுக - பாஜக இடையேயான இந்த போஸ்டர் யுத்தம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
திருப்பரங்குன்றம் பகுதியில் திமுகவினர், "மத்திய அரசே.. உங்க மிரட்டலுக்கு திமுக எப்போதும் அஞ்சாது, நாங்க மிசாவையே பார்த்தவங்க; பயம் எங்க பயோ டேட்டாவிலேயே கிடையாது' என்ற வாசகங்கள் அச்சிடப்பட்ட போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுகவினரின் போஸ்டர்களுக்கு பக்கத்திலேயே, 'சிறைபட்டது அணில்.. அடடே ஆச்சரியக்குறி, திராவிட மாடலே! நீங்க மிசாவை தானே பார்த்தீங்க.. அமித்ஷாவை பார்த்ததில்லையே? பயம் உங்க பயோடேட்டாலயே இல்ல.. பார்த்தாலே தெரியுதுல' என்கிற வாசகங்களுடன், செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டபோது நெஞ்சு வலியுடன் கதறிய புகைப்படத்துடன் பாஜகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையை முன்வைத்து, திமுக - பாஜக இடையே கருத்துப் போர் நடந்து வரும் நிலையில் இந்த போஸ்டர் யுத்தத்தால் மதுரை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications