திமுகவின் ஆட்சி மக்களாட்சியாக,... மக்களுக்கு நிம்மதி தரும் ஆட்சியாக அமையும்... ஸ்டாலின் பேச்சு
மதுரை : திமுகவின் ஆட்சி மக்களாட்சியாக, மக்களுக்கு நிம்மதி தரும் ஆட்சியாக அமையும் என்று பேசிய அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், சட்ட விரோதச் செயல்பாடுகளை இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படும் என்றும் கூறினார்.
மதுரை சிம்மக்கல்லில் கருணாநிதியின் உருவச்சிலையை திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், மாநிலம் முழுவதும் கருணாநிதியின் சிலையைத் திறக்கப்படுவதை தடுக்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அதையும் தாண்டி மாநிலத்தில் பல் இடங்களில் கருணாநிதியின் சிலைகள் திறக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்,
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மதுரை யானைமலை, ஒத்தக்கடைப் பகுதியில் நடைபெற்ற "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்று, மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.
டோல்கேட் பிரச்சினை
அப்போது பேசிய அவர், "மதுரை கப்பலூர் டோல்கேட்டால் திருமங்கலம் மக்கள் மதுரைக்குச் செல்வதற்கு அதிக நேரமாகிக் கொண்டிருக்கிறது. ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியவில்லை. இந்த டோல்கேட் பிரச்சினை இங்கு மட்டுமல்ல, தமிழ் நாட்டின் தலைநகராக இருக்கும் சென்னையிலும் இது பிரச்சினையாக இருக்கிறது. இது குறித்து திமுக எம்.பி.க்கள் டெல்லியில் மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கையை வைத்தார்கள்.
அமைச்சர் பதில்
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளுக்கு மட்டும் தான் மத்திய அரசு முடிவெடுக்கும் என்றும் சென்னைக்கு உள்ளே இருக்கும் டோல்கேட் பற்றி முதலமைச்சர் தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார். இது குறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பியபோதும், அரசு அதைப்பற்றி காது கொடுத்துக் கேட்கவில்லை.
திமுக திட்டங்கள்
நகராட்சியாக இருந்த மதுரையை 1971 இல் மாநகராட்சியாக மாற்றியது, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளை அமைத்தது , மருதுபாண்டியருக்கு சிலை அமைத்தது, தேவநேயப்பாவாணர் மற்றும் பரிதிமாற்கலைஞருக்கு மணிமண்டபம் அமைத்தது, வைகை ஆற்றின் குறுக்கே மேம்பாலம், மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், சர்வதேச விமானநிலையம் என மதுரைக்காக கருணாநிதி நிறைய திட்டங்களைச் செய்துள்ளார்.
எய்ம்ஸ் மருத்துவமனை
இப்படி எதையாவது சொல்ல முடியுமா அதிமுகவால்? எய்ம்ஸ் மருத்துவமனையையாவது கொண்டு வந்துவிடுவார்கள் என்று நினைத்தேன். அதிலும் ஏமாற்றம் தான் கிடைத்தது. 2015 ஆம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அறிவிப்பை நாடாளுமன்றத்தில் பாஜக அரசு செய்தது. அதன்பிறகு எதுவும் நடக்கவில்லை. 2018 ஜூன் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்பிறகு எதுவும் நடக்கவில்லை. 2019 ஜனவரி நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக்காக மதுரை வந்தார் பிரதமர். அடிக்கல் நாட்டினார். இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. எதுவும் நடக்கவில்லை.
அமைதி தரும் ஆட்சி
திமுக ஆட்சியானது மக்களாட்சியாக அமையும். அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நிம்மதி தரும் ஆட்சியாக அமையும். சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்படும். சட்ட விரோதச் செயல்பாடுகளை இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம். அதில் நம்பிக்கையோடு இருங்கள். அமைதியான வாழ்வுக்கான உத்தரவாதத்தை இந்த மதுரை மண்ணிலிருந்து தமிழக மக்களுக்கு வழங்குகிறேன்" என்றார்.