மர்மம் உடைகிறது.. ராஜ ராஜ சோழன் நினைவிடத்தில் நவீன தொழில்நுட்ப ஆய்வு.. 25ம் தேதி அறிக்கை: ஹைகோர்ட்
மதுரை: சோழ குலத்தின் புகழ் பெற்ற மன்னரான, ராஜ ராஜ சோழன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று, தர தொல்லியல் துறைக்கு ஹைகோர்ட் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
வழக்கறிஞர் திருமுருகன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
வழக்கறிஞர் திருமுருகன் தனது மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக பரப்பில் புகழ் பெற்ற மன்னனாக இருந்தவர் சோழர் குலத்தை சேர்ந்த ராஜராஜ சோழன். அருள்மொழித்தேவன் என்ற இயற்பெயரை பெற்றிருந்தார். தஞ்சை பெரிய கோயிலை கட்டி ஆன்மீக தொண்டாற்றினார்.
ராஜராஜசோழன் மறைந்த பிறகு, அவரது உடல், கும்பகோணம் அருகேயுள்ள, உடையாளூர் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. எனவே அங்கு, ராஜராஜசோழனுக்கு தமிழக அரசு மணி மண்டபம் கட்ட நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். வங்கக்கடல் ஓரத்தில் ராஜராஜ சோழனுக்கு சிலை நிறுவ வேண்டும். இவ்வாறு மனுவில் கோரப்பட்டிருந்தது.
கருணாநிதி பிறந்த நாளில் ஸ்டாலின் முதல்வராவது உறுதி .. உதயநிதி ஸ்டாலின் ஆரூடம்!
இதுகுறித்து தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், மனுதாரர் குறிப்பிட்ட இடத்தில் ராஜராஜ சோழன் அடக்கம் செய்யப்பட்டதற்கான ஆதாரம் இல்லை என கூறப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், நவீன தொழில்நுட்பத்தை கொண்டு உடையாளூர் பகுதியில் தொல்லியல் துறை சோதனை நடத்தி, அதுகுறித்த அறிக்கையை ஏப்ரல் 25ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு, நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
உயர் நீதிமன்றத்தின் உத்தரவால், ராஜராஜ சோழன் குறித்த மர்ம முடிச்சுகள் அவிழும் வாய்ப்பு உள்ளது.