மருத்துவமனைக்கு வந்த பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை.. மதுரை மருத்துவர் சஸ்பெண்ட்
மதுரை: மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக ஸ்கேன் பரிசோதனைக்காக வந்த இளம்பெண்ணுக்கு மருத்துவர் பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரையடுத்து புகாருக்குள்ளான மருத்துவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள மதுரையில் அரசு ராஜாஜி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு மதுரை மட்டுமின்றி திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்ட மக்கள் அவசர தேவைகளுக்காக உயிர்காக்கும் சிகிச்சைக்காகவும் இங்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மருத்துவமனையும் மருத்துவக் கல்லூரியும் ஒருசேர செயல்பட்டு வருவதால் தங்கள் உயிர் காக்கும் உன்னத மருத்துவமனையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையைத் தென் மாவட்ட மக்கள் நம்பி வருகின்றனர்.
ஸ்ரீரங்கம் பகல்பத்து உற்சவம் 3 ஆம் திருநாள்: அலங்காரமாக எழுந்தருளிய நம்பெருமாளுக்கு அரையர் சேவை
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே மருத்துவமனை பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரசவத்திற்கு வந்த பெண்ணுக்கு அவரது அனுமதியில்லாமல் கருத்தடை சாதனம் பொருத்தப்பட்டது சர்ச்சையான நிலையில், தற்போது அந்த மருத்துவமனை மருத்துவர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது.
சிகிச்சைக்கு வந்த இளம்பெண்
மதுரை ராஜாஜி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ஸ்கேன் பரிசோதனை மையமும் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் 26 வயது இளம்பெண் ஒருவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வந்துள்ளார். அவருக்கு ஸ்கேன் எடுக்க மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதையடுத்து அப்பெண் ரேடியாலஜி பிரிவுக்கு ஸ்கேன் பரிசோதனைக்காக வந்துள்ளார்.
பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர்
அப்போது அங்கு பணியில் இருந்த ரேடியாலஜி மருத்துவர் சக்கரவர்த்தி ஸ்கேன் செய்வதாக கூறி அந்த பெண்ணிடம் அத்துமீறியுள்ளார். ஸ்கேன் அறைக்குள் இருந்த செவிலியரை வெளியே செல்ல கூறிய மருத்துவர் சக்கரவர்த்தி, அரை மயக்க நிலையில் தனியாக இருந்த இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். மறுநாள் மீண்டும் பரிசோதனைக்காக வந்த அந்த பெண்ணிற்கு, மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது இதுகுறித்து அந்த இளம்பெண் குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.
புகார் குறித்து விசாரணை
இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து அரசு மருத்துவமனை முதல்வர் ரத்தினவேல் மற்றும் ரேடியாலஜி துறை தலைவரிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விசாரிக்க விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அறிக்கை சென்னை மருத்துவ கல்வி இயக்குநரகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் எனவும், பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானால் சம்பந்தப்பட்ட டாக்டர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
முதற்கட்ட அறிக்கை தாக்கல்
இதனை தொடர்ந்து புகார் குறித்து மருத்துவமனையில் குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. முதலாவதாக ஸ்கேன் சென்டரில் பணிபுரியக்கூடிய செவிலியரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் புகாரின் மீது அடிப்படை முகாந்திரம் இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து முதற்கட்ட அறிக்கை மருத்துவ கல்வி இயக்ககத்திற்கு அனுப்பப்பட்டது.
மருத்துவர் பணியிடை நீக்கம்
இதனையடுத்து, புகாரின் அடிப்படையில் அரசு மருத்துவர் சக்கரவர்த்தியை தற்காலிகமாக பணிநீக்கம் செய்து மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் ஸ்கேன்சென்டரில் புகாருக்கு உள்ளான மருத்துவர் மீது இதே போன்று வேறு ஏதேனும் புகார் இருந்தாலும் விசாரணைக் குழுவிடம் தெரிவிக்கலாம் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அரசு மருத்துவமனையில் மருத்துவரே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது