இதோ.. இப்படி கழிவு நீர்தான் எங்களுக்கு சாப்பாட்டுக்கு.. கண்ணீர் விடும் பரிதாப மக்கள்
குடிநீர் பஞ்சம் காரணமாக கழிவுநீரை வடிகட்டி பயன்படுத்துகிறார்கள் மக்கள்
மதுரை: "இதோ.. இப்படி கழிவு நீர்தான் எங்களுக்கு சாப்பாட்டுக்கு... இதை எடுக்கவே நாங்க 2 கிலோ மீட்டருக்கு நடந்து வர்ற வேண்டியதா இருக்கு" என்று பெண்கள் புலம்பி தள்ளுகிறார்கள்.
தமிழகம் முழுவதும் தலைதூக்கி வரும் குடிநீர் பிரச்சனையின் அவலம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருமங்கலம் தொகுதி கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமம்தான் வலையங்குளம். கிட்டத்தட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கு உள்ளன.
கடுமையான தண்ணீர் பஞ்சம் இந்த கிராமத்தில் ஏற்பட்டுள்ளது. கிடைக்கிற உப்பு தண்ணியும் கிடைக்காமல் அல்லோலப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
எத்தனையோ முறை அதிகாரிகளிடம் சொல்லியும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டுகிறார்கள். அதனால் ரோட்டோரம் தேங்கி கிடக்கும் கழிவுநீரையாவது பயன்படுத்தலாம் என்று குடத்துடன் வந்து போகிறார்கள்.
மழைபெய்து ரோட்டோரம் தேங்கி கிடக்கும் இந்த கழிவு நீரை வடிகட்டி குடிக்கிறதுக்கு வைத்து கொள்கிறார்களாம். இந்த தண்ணியை எடுக்கணும்னாகூட அரை கிலோ மீட்டர் தூரம் நடந்து வர வேண்டி இருக்கு என்கிறார்கள். இதைவிட்டால் 5 கிலோ மீட்டர் தூரம் போனால்தான் நல்ல தண்ணி கிடைக்குமாம். கிராம பகுதி என்றால், ஆடு, மாடுகளை வைத்திருப்பதால், அவைகளுக்கும் பெரிய சிரமம் ஏற்பட்டுள்ளது என்று புலம்புகிறார்கள்