கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு செல்லாதது ஏன்?.. கமல்ஹாசன் பரபர விளக்கம்!
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்வதாக நான் ஒருபோதும் கூறவில்லை என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
மதுரை: திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்வதாக நான் ஒருபோதும் கூறவில்லை என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் அண்ணா மற்றும் மறைத்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலைகள் இன்று திறக்கப்பட உள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சிலையை திறக்கிறார்.
இந்த விழாவிற்கு திமுக சார்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று மாலை திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் சேர போகிறது என்று வதந்தி பரவியது.
இதையடுத்து கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் கமல்ஹாசன் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இல்லை என்றும் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.
இன்று கஜா புயல் நிவாரண ஆய்விற்காக மதுரை சென்ற கமல்ஹாசன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அதில், கஜா நிவாரணத்திற்காக மாநில அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். போதுமான நிதியை தமிழக அரசுதான் கேட்டு பெற வேண்டும். இன்னும் பல இடங்களில் நிவாரணம் வழங்கப்படவில்லை.
பல இடங்களுக்கு அரசு அதிகாரிகள் சென்று பார்க்க வேண்டும். ஆனால் சென்று பார்ப்பதோடு நிற்க கூடாது. போதுமான நிதியை மக்களுக்கு வழங்க வேண்டும்.
கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு செல்வதாக நான் கூறவில்லை. நான் விழாவிற்கு செல்வதாக வாக்களிக்கவில்லை. கஜா பாதித்த இடங்களை பார்வையிட ஏற்கனவே திட்டமிட்டு இருந்தேன்.
ஏற்கனவே இதற்கான தேதிகளை குறித்துவிட்டேன். அதனால் சிலை திறப்பு விழாவிற்கு செல்லவில்லை. கடைசி நேரத்தில் திட்டத்தை மாற்ற முடியாது.
கருணாநிதி மீது எனக்கு பெரிய மரியாதை இருக்கிறது. அது எல்லோருக்கும் தெரியும். அதை எல்லா முறையும் நான் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை, என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.