அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது அவதூறு வழக்கு.! தமிழக அரசு மீது ஸ்டாலின் புகார்
மதுரை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பற்றி அவதூறாக பேசியதாக தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய, திமுக தலைவர் ஸ்டாலின் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக அரசு வழக்கறிஞரான மனோகரன், திண்டுக்கல் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கையே ரத்து செய்து உத்தரவிட கோரி, தற்போது உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஸ்டாலின் சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவில் முகாந்திரம் ஏதும் இன்றி அரசியல் காழ்ப்புணர்வுடன், தம் மீது அரசு தரப்பு வழக்கு தொடர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பேச்சுரிமை மற்றும் கருத்துரிமைக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அவதூறு வழக்கில் திண்டுக்கல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து தமக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும், ஸ்டாலின் கோரியுள்ளார்.
ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள இந்த மனுவானது விரைவில் ஐகோர்ட் மதுரை கிளையில் விசாரணைக்கு வர உள்ளது.
முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே, திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பல கருத்துகள் கூறியிருந்ததாக புகார் கூறப்பட்டது.
ஊராட்சி சபை கூட்டத்தில் அதிமுக ஆட்சியில் ஊழல் நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டி பேசிய ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி அதிகம் ஊழல் செய்து வரும் ஆளாக இருப்பதாக சரமாரியான பல கருத்துகளை முன்வைத்ததாக கூறப்படுகிறது. மேலும் முதல்வர் ஒரு நகைச்சுவையான ஊழல்வாதி என்றும் ஸ்டாலின் தாக்கி பேசியதாக கூறப்பட்டது.
இதனையடுத்து ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தொடர முதல்வர் பழனிசாமி பச்சை கொடி காட்டியதை அடுத்து, அரசு தரப்பு வழக்கறிஞரான மனோகரன், திண்டுக்கல் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் கடைசியாக கடந்த மாதம் 11-ம் தேதி மாவட்ட முதன்மை நீதிபதி எம்.கே. ஜமுனா முன்னிலையில் விசாரிக்கப்பட்டது. அப்போது ஸ்டாலின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஸ்டாலின் தேர்தல் நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பங்கேற்றுள்ளதால் நீதிமன்றத்திற்கு வர முடியவில்லை என்றார்.
இதனையடுத்து வழக்கின் விசாரணை ஜூலை 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. நாளை மறுநாள் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய சூழலில், தற்போது அவதூறு வழக்கிற்கு எதிராக ஸ்டாலின் தரப்பு மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.