துரைவையாபுரி தேர்தலில் போட்டியிடமாட்டார்... ஆனால் தேர்தலுக்கு பின் ஒரு திட்டம் இருக்கு.. வைகோ பூடகம்
மதுரை: சட்டசபை தேர்தலில் மகன் துரை வையாபுரி போட்டியிடமாட்டார்; சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் நடைபெறும் பொதுக்குழுவில் சொல்லப் போகும் என் திட்டம் என்னவென்று எனக்குதான் தெரியும் என மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான வைகோ பூடகமாக தெரிவித்திருப்பது பரபரப்பை கிளப்பி உள்ளது.
வைகோ மகன் துரை வையாபுரியை மதிமுக இளைஞரணி செயலாளராக நியமிக்க வேண்டும்; துரை வையாபுரி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பது அக்கட்சி நிர்வாகிகளின் கோரிக்கை. மேலும் சட்டசபை தேர்தலில் துரை வையாபுரிக்கான தொகுதியை வைகோ பெற்றுவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
தேர்தலில் போட்டி இல்லை
ஆனால் துரை வையாபுரி தேர்தலில் போட்டியிடமாட்டார் என வைகோ திட்டவட்டமாக கூறி வருகிறார். மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, துரை வையாபுரியை கட்சி நிர்வாகிகள் திருமண விழாக்களுக்கும் துக்க நிகழ்வுகளுக்கும் அழைத்து செல்கின்றனர். அவர் தேர்தலில் போட்டியிடமாட்டார்.
அந்த திட்டம்
சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் பொதுக்குழுவில் சொல்வதற்கு ஒரு திட்டம் இருக்கிறது. அது என்ன திட்டம் என்பதை அப்போது அறிவீர்கள் என பூடகமாக கூறினார். மேலும் தமிழக முதல்வர் 9 ஆண்டு காலம் தூங்கிவிட்டு தற்போது அறிவிப்புகளை மட்டும் வெளியிட்டுவருகிறார். தமிழகத்திற்கு வர வேண்டிய எந்த திட்டமும் வரவில்லை.
கூட்டணியில் புதிய கட்சிகள்
விவசாய சட்டத்திற்கு எதிராக போராடுபவர்களை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. மத்திய அரசு கார்ப்பரேட் அரசாகவும் மாநில அரசு மத்திய அரசின் கொத்தடிமை அரசாகவும் உள்ளது. இந்த தேர்தலில் அதிமுகவையும் பாஜகவையும் தோற்கடித்தே ஆக வேண்டும் என்பதால் எத்தனை இடம் கொடுத்தாலும் போட்டியிட தயாராக இருக்கிறோம். புதிதாக எந்த கட்சிகளும் கூட்டணியில் இடம்பெற வாய்ப்பு இல்லை என்றும் வைகோ கூறினார்.
முதியோருக்கு தபால் வாக்கு சரி
சசிகலா குறித்த கேள்விக்கு ஜெயிலில் இருந்து வந்துள்ளார் அவ்வளவுதான் என்றும் முதியவர்களுக்கு தபால் வாக்கு வழங்குவது என்பது சரிதான் என்பது எனது கருத்து என்றும் வைகோ கூறினார்.