நான் வளர்த்த பிள்ளை ஓங்கி வளர்ந்து நிற்குது.. உசிலம்பட்டியில் துரைமுருகன் மகிழ்ச்சி
Recommended Video
மதுரை: வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த 58 கிராமங்கள் பயன்பெறும் வகையில் தண்ணீர் கொண்டுசெல்வதற்காக அமைக்கப்பட்ட கால்வாயை பார்வையிட்ட சட்டசபை பொதுக்கணக்கு குழு தலைவர் துரைமுருகன், தொட்டிப்பாலத்தை பார்க்கிற போது நான் வளர்த்த பிள்ளை ஓங்கி வளர்ந்து நிற்பது போன்ற மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.
வைகை அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் வெள்ளமாய் பெருக்கெடுத்து ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்குச் சென்று சேர்ந்து பின்னர் வங்கக்கடலில் கலக்கும். இந்த தண்ணீரால் வழியெங்கிலும் உள்ள பல லட்சம் ஏக்கர் பாசனப்பகுதிகள் பயன்பெறும்.
ஆனால் அதற்கு ஒட்டியே உள்ள உசிலம்பட்டியில் குடிக்கக் கூட தண்ணீர் இல்லாமல், வானம்பார்த்த பூமியாக இருந்து வந்தது. உசிலம்பட்டி பகுதி கிராமங்கள் தங்கள் பகுதிக்கு வைகை ஆற்று நீரை கால்வாய் வெட்டி திருப்பி விட வேண்டும் என 50 ஆண்டுகளாக போராடினார். ஆனால் இதற்கு காலம் காலமாக பாசனம் செய்து வரும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தால் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசால் இயலவில்லை.
கருணாநிதி ஆட்சியில் அடிக்கல்
இந்நிலையில், பல்வேறு தடைகளை கடந்து 1996 ஆம் ஆண்டு மறைந்ந முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியின் போது இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன், வைகை அணை 70 அடியை எட்டும் போது மட்டுமே இந்த தண்ணீர் உசிலம்பட்டி பகுதிக்கு திருப்பிவிடப்படும் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்த பாசன விவசாயிகளை சம்மதிக்க வைத்தார்.
உபரி நீரை கொடுங்கள்
இதையடுத்து உசிலம்பட்டியை ஒட்டிய 58 கிராம மக்களும் `வைகை அணை நிறையும் போது, திறந்துவிடப்படும் உபரி நீர் கடலில் கலக்கிறது. அந்த நீரை மட்டும் எங்களுக்குக் கொடுங்கள். வேறு எதுவும் வேண்டாம். உங்கள் உரிமையில் நாங்கள் எப்போதும் தலையிட மாட்டோம் என்று தெரிவித்தனர்.
மூன்று தொட்டில் பாலங்கள்
இதையடுத்து வைகை அணையின் வலதுபுறக் கரைப் பகுதியில் உள்ள 58 கிராம பாசனக் கால்வாய் மதகிலிருந்து 27.735 கிலோ மீட்டர் தூரம் பிரதான கால்வாய் அமைக்கப்பட்டது. . அதைத் தொடர்ந்து, உத்தப்ப நாயக்கனூரில் இரு கால்வாய்களாக பிரித்து 11.925 கிலோமீட்டர் தூரம் இடப்பக்கமும், 10.24 கிலோமீட்டர் தூரம் வலப்பக்கமும் கால்வாய் அமைக்கப்பட்டது. இப்பாதைகளின் இடையில் மலை மற்றும் காட்டுப்பகுதிகள் இருப்பதால், மூன்று இடங்களில் தொட்டிப் பாலங்கள் அமைக்கப்பட்டது. பணிகள் நிறைவடைந்ததால் கடந்த ஆண்டு 69 அடியை வைகை அணை எட்டிய போது இப்பகுதி மக்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீரை பார்த்து 58 கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
58 கிராம கால்வாய்
இந்நிலையில் 58 கிராம கால்வாய் தொட்டிப்பாலத்தை சட்டசபை பொதுக்கணக்கு குழுவின் தலைவர் துரைமுருகன் தலைமையிலான 10 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆய்வு மேற்கொண்டனர்...
அப்போது செய்தியாளர்களை சந்தித்த குழுவின் தலைவர் துரைமுருகன் 1996ஆம் ஆண்டு கருணாநிதி முதல்வராகவும் நான் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த போது இந்த 58 கிராம கால்வாய் திட்டத்தை கொண்டு வந்தோம். .
அனைவருக்கும் பாராட்டு
வைகை அணையிலிருந்து உபரிநீராக கடலில் கலக்கும் நீரை வறட்சி பகுதியான உசிலம்பட்டி பகுதிக்கு வழங்கிட வேண்டும் என்ற நோக்கில் பல தடைகளுக்கு மத்தியில் துவக்கவிழாவும் நடத்தினோம். இன்று இந்த திட்டத்தின் தொட்டிப்பாலத்தை பார்க்கிற போது நான் வளர்த்த பிள்ளை ஓங்கி வளர்ந்து நிற்பது போன்று மகிழ்ச்சி அளிக்கிறது, இந்த திட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த அனைவரும் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
தாமதம் இயல்பு
58 கிராம கால்வாய் திட்டம் 20 ஆண்டு காலதாமதம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு ஆட்சிகள் மாறும் போது திட்டங்கள் காலதாமதம் நடக்கும் இயல்பு தான் என துரைமுருகன் பதில் அளித்தார்.