முற்றுகிறது உட்கட்சி மோதல்..ஒபிஎஸ் வாகனத்தில் இருந்த இபிஎஸ் போட்டோ கிழிப்பு..தொண்டர்கள் ஆவேசம்
ஓபிஎஸ் வாகனத்தில் இருந்த இபிஎஸ் போட்டோவை கிழித்து செருப்பால் அடித்தனர் அவரது ஆதரவாளர்கள்.
மதுரை: ஓபிஎஸ் வாகனத்தில் இருந்த இபிஎஸ் படத்தை கிழித்து எறிந்து, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் செருப்பால் அடித்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் நாளுக்கு நாள் அதிகரித்து ஓபிஎஸ் இபிஎஸ் ஆதரவாளர்களிடையேயான மோதல் முற்றியுள்ளது.
ஒற்றைத் தலைமை விவகாரத்தால் அதிமுக கிட்டத்தட்ட இரண்டாக பிரிந்து கிடக்கிறது. இரு அணியினரும் மாறி மாறி ஒருவரையொருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இரட்டைத் தலைமையை ரத்துசெய்ய வேண்டும் என சி.வி.சண்முகம், பொதுக்குழு உறுப்பினர்களின் சார்பாக ஒரு கோரிக்கையை வைக்க, ஓ.பி.எஸ் கூட்டத்தைவிட்டு வெளிநடப்பு செய்தார்.
ஓபிஎஸ் கையில் 'அஸ்திரம்’.. முறியடிக்க எடப்பாடி போட்ட ஸ்கெட்ச்.. இன்று 2 பேரை இறக்கியதே அதற்குத்தானா?
ஓ.பன்னீர் செல்வம்
பொதுக்குழு கூட்டத்தில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் வெளியேறும்போது சிலர் வாட்டர் பாட்டில்களை வீசும் காட்சிகளையும் பார்க்க நேர்ந்தது. பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு நேர்ந்த அவமானத்திற்கு பின்னர் ஓபிஎஸ் இபிஎஸ் என அவர்களது ஆதரவாளர்கள் இரு பிரிவினராக செயல்பட்டு வருகின்றனர். மாவட்டங்களில் உள்ள அதிமுக கட்சி அலுவலகங்களில் இருந்து ஓபிஎஸ் படம் அகற்றப்பட்டு வருகிறது.
நமது அம்மா நாளிதழ்
அத்துடன் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அடுத்த கட்ட நடவடிக்கையாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா நாளிதழின் நிறுவனர் பதவியில் இருந்து ஒபிஎஸ் நீக்கியுள்ளதால், அக்கட்சியில் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ளதையே காட்டுகிறது.
மதுரை வந்த ஓபிஎஸ்
இதையடுத்து அன்றிரவே டெல்லி சென்ற ஓபிஎஸ் தற்போது சென்னை திரும்பியுள்ளார். சென்னையில் இருந்து விமானம் மூலமாக மதுரை விமானநிலையத்திற்கு வருகை தந்த ஓபிஎஸ்சிற்கு அதிமுகவின் ஒற்றைத்தலைமையே, பொதுச்செயலாளரே என்ற முழக்கத்தோடு அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
இபிஎஸ் படம் கிழிப்பு
தொண்டர்கள் வருகை அதிகமாக இருந்ததால் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் தொண்டர்கள் கீழே விழுந்து காயமடைந்தனர். இதனையடுத்து தனது பிரச்சார வாகனத்தில் ஓபிஎஸ் புறப்பட்டார். அப்போது பிரச்சார வாகனத்தில் ஒட்டப்பட்டிருந்த இபிஎஸ் படத்தை பார்த்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கிழித்து எறிந்தனர். சிலரோ தங்களது காலணியால் இபிஎஸ் படத்தை தாக்கியதோடு அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மேலும் இபிஎஸ் படத்தையும் அழித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
வழி நெடுக வரவேற்பு
ஓ.பன்னீர் செல்வம் மதுரை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு பெரியகுளம் சென்றார் வழி எங்கும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார். செக்கானூரணி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி வழியாக சென்ற போது அவருக்கு வழி நெடுக காத்திருந்த தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Recommended Video
முற்றிய மோதல்
அதிமுகவில் உட்கட்சி மோதல் முற்றியுள்ள நிலையில் நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர்கள் பலரும் எடப்பாடி பழனிச்சாமியின் பக்கம் உள்ளனர். தொண்டர்கள் என் பக்கம் இருக்கிறார்கள் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார் ஓ.பன்னீர் செல்வம். அவரது அடுத்த கட்ட நகர்வு எப்படி இருக்கப்போகிறது கட்சி உடையுமா? இரட்டை இலை சின்னம் மீண்டும் முடங்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.