இயேசு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பெருவிழா.. வாணவேடிக்கை, மின்னொளி அலங்காரத்துடன் கொண்டாட்டம்
மதுரை: இயேசு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகையையொட்டி, நாடு முழுவதும் கிறிஸ்துவ தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.
மதுரை லுர்டெஸ் புனித தேவாலயத்தில் சிறப்பு ஈஸ்டர் தினம் பிரார்த்தனை நடைபெற்றது. நள்ளிரவு 12 மணி அளவில் வாணவேடிக்கை, மின்னொளி அலங்காரத்துடன் சிலுவைக்கொடியை கையில் தாங்கியப்படி, இயேசு உயிர்த்தெழும் காட்சி தத்ரூபமாக நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது.
ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு சென்னை சாந்தோம் பேராலயத்தில், சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. நள்ளிரவு சிறப்பு வழிபாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் ஆலயத்தில் ஆயர் நசரேன் சூசை தலைமையில் நடைபெற்ற பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். சனிக்கிழமை இரவு 8 மணிக்கு ஆரம்பித்த சிறப்புப் பிரார்த்தனை நள்ளிரவு வரை நீடித்தது. நள்ளிரவில் இயேசு உயிர்த்தெழுந்த காட்சி தத்ரூபமாக நடத்தி காண்பிக்கப்பட்டது. கிறிஸ்தவ மக்கள் ஒருவருக்கொருவர் ஈஸ்டர் தின வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.
Tamil Nadu: Special #EasterSunday prayers being held at Lourdes Shrine Church in Madurai. pic.twitter.com/WMjD0U126G
— ANI (@ANI) April 21, 2019
நாகை வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இயேசு உயிர்த்தெழுவதை உணர்த்தும் வகையில், பாஸ்காஒளியை பேராலய அதிபர் பிரபாகர் அரங்கத்தின் மேடைக்கு எடுத்து சென்று ஜெபவழிபாடுகளை மேற்கொண்டனர்.
புதுச்சேரியில் உள்ள தூய ஜென்மராக்கினி அன்னை பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது. புதுச்சேரி - கடலூர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் இயேசு உயிர்த்தெழுந்து வரும் நிகழ்ச்சி அரங்கேறியது. அப்போது கிறிஸ்துவர்கள் இயேசு மீது மலர்களை தூவி பக்தி பாடல்களை பாடினர்.
இதேபோன்று புதுச்சேரியில் உள்ள தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா ஆலயம், நெல்லித்தோப்பு விண்ணேற்பு மாதா ஆலயம், வில்லியனூர் லூர்து மாதா ஆலயம் உள்பட பல்வேறு தேவாலயங்களில் இயேசு பிரான் உயிர்த்தெழுந்ததை குறிக்கும் ஈஸ்டர் திருவிழா கொண்டாடப்பட்டது.