மீனாட்சி அம்மன் கோவிலில்... முதியவர்கள், சிறுவர்கள் தரிசனத்துக்கு அனுமதி!
மதுரை: உலகப்புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video
கொரோனா வழிகாட்டு வழிமுறைகளை கடைபிடித்து பக்தர்கள் பயபக்தியுடன் மீனாட்சி அம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர்.
பூஜை பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலகப்புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவில்
மதுரையில் உலகப்புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்நதவர்களும், வெளிநாட்டினரும் வந்து மீனாட்சி அம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர் .கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 23-ந்தேதி முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
பக்தர்கள் அனுமதி
சமீபத்தில் கோவிலின் கிழக்கு பகுதியில் உள்ள அம்மன் சன்னதி வழியாக பொது தரிசனத்துக்கும், தெற்கு கோபுரம் வழியாக கட்டண தரிசனத்துக்கும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். ஆனால் அர்ச்சனை போன்ற பூஜைகளில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. அதுவும் நிபந்தனைகளை பின்பற்றி சுவாமி, அம்மனை மட்டும் தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். பழைய நடைமுறையை போல, சுதந்திரமாக தரிசனம் செய்யவும், பூஜைகளை நடத்தவும், அர்ச்சனை செய்யவும் பக்தர்கள் ஏங்கி தவித்து வந்தனர்.
4 கோபுர வாசல்களிலும் அனுமதி
மீனாட்சி அம்மன் கோவிலில் வழக்கம் போல் அனைத்து கோபுரவாசல்கள் வழியாகவும் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்றும், பூஜை பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் செய்வதற்கு கோவிலின் 4 கோபுர வாசல்கள் வழியாகவும் இன்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதியவர்கள், சிறுவர்கள் தரிசனம்
மேலும், முதியவர்கள் மற்றும் சிறுவர்களும் இன்று முதல் மீனாட்சி அம்மன் தரிசனம் பெற கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கோவில் நிர்வாகம் கூறியுள்ளது. கொரோனா வழிகாட்டு வழிமுறைகளை கடைபிடித்து பக்தர்கள் பயபக்தியுடன் மீனாட்சி அம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர். இதேபோல் பூஜை பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.