மதுரை சித்திரை திருவிழாவுக்காக தேர்தல் தேதியை மாற்ற முடியாது… தேர்தல் ஆணையம் திட்டவட்டம்
மதுரை: சித்திரை திருவிழாவை முன்னிட்டு, மதுரையில் நாடாளுமன்றத் தேர்தல் தேதியை மாற்ற முடியாது என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாளில் மதுரையில் பிரசித்திப் பெற்ற சித்திரை திருவிழா தேரோட்டம், மறுநாள் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற உள்ளதால், தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் பார்த்தசாரதி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நாடு முழுவதும் பாதுகாப்பு காரணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை கருத்தில் கொண்டு ஆராய்ந்து திட்டமிட்டு தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே சித்திரை திருவிழாவை காரணம் காட்டி தேர்தலை தள்ளிவைக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.
மேலும், கோயிலை சுற்றியுள்ள 18 வாக்குச்சாவடிகளை பதற்றம் நிறைந்தவையாக அறிவிக்க வேண்டும். வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் நீட்டிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. துணை ராணுவ படையுடன் தேர்தல் நடத்த முடியும் என தெரிவித்தார்.
வலையில் சிக்கிய டாக்டர் மனைவி.. பொள்ளாச்சி பலாத்கார கும்பல் போனில் அதிர்ச்சி வீடியோ
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்பதில் தேர்தல் ஆணையத்துக்கு அக்கறை இல்லையா? என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நாளை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இல்லையென்றால் நேரில் ஆஜராக நேரிடும் என உத்தரவிட்டனர்.