மதுரையில் திட்டமிட்டபடி தேர்தல்… தேர்தலை தள்ளிவைக்க கோரிய வழக்குகள் தள்ளுபடி
மதுரை: சித்திரைத் திருவிழா மற்றும் பெரிய வியாழன் பண்டிகையை சுட்டிக்காட்டி, மக்களவை தேர்தலை தள்ளிவைக்க கோரிய வழக்குகளை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
வாக்குப்பதிவை இரவு 8 மணி வரை நீட்டிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அளித்த விளக்கத்தை ஏற்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18-ம் தேதி மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெறுவதால், மதுரை மக்களவைத் தொகுதியில் தேர்தலை தள்ளி வைக்கக்கோரி பார்த்தசாரதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இதேபோல் தேர்தல் நாளில் பெரிய வியாழன் பண்டிகை என்பதால், கிறிஸ்தவ பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை மாற்ற வேண்டும் என பிஷப் கவுன்சில் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதேபோல் புனித வாரம் வருவதால் தேர்தலை தள்ளி வைக்கக்கோரி மற்றொரு கிறிஸ்தவ அமைப்பும் வழக்கு தொடர்ந்திருந்தது.
இவ்வழக்குகள் நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சித்திரை திருவிழாவை காரணம் காட்டி தேர்தலை தள்ளி வைக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அதேசமயம், இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நேரத்தை நீட்டித்திருப்பதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.
இதனை அடுத்து, தேர்தல் ஆணையத்தின் வாதத்தை ஏற்று, தேர்தலுக்கு எதிரான 3 மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். ஆகையால், மதுரை மக்களவைத் தொகுதியில் திட்டமிட்டபடி தேர்தல் நடைபெற உள்ளது.