ஏழை காத்த அம்மன் கோவில் விழா - கடும் விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
கோவில்பட்டியில் ஏழைகாத்தம்மன் கோவிலும் உள்ளன. இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு ஆண் பக்தர்கள் உள்ளாடை மட்டும் அணிந்து வைக்கோலை கயிறு போல திரித்து உடல் முழுக்க இறுக்கமாக சுற்றிக்கொண்டும், பல விதமான உருவங்களில் முகமூடிகளை அணிந்தும் 7 கிலோ மீட்டர் தூரம் வெள்ளலூரில் இருந்து கோவில்பட்டியில் உள்ள கோவிலுக்கு ஊர்வலமாக நடந்து வந்தனர். பெண் பக்தர்களில் திருமணம் ஆகாதவர்கள் மண் பொம்மைகள் சுமந்து வந்தனர். திருமணம் ஆன பெண் பக்தர்கள் மண் கலயங்களில் பாலை ஊற்றி அதில் தென்னை மர குருத்து பாலைகளை வைத்து அலங்கரித்து மதுக்கலயங்களை சுமந்து வந்தனர்.
தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் விதவிதமான வழிபாட்டு முறைகள் காலம்காலமாக பின்பற்றப்பட்டு வருகின்றன. பிரபலமான அலகுகுத்துதல், தீமிதித்தல், காவடி எடுத்தல், அங்கப்பிரதட்சணம் செய்தல் போன்ற அனைவருக்கும் தெரிந்த வழிபாட்டு முறைகளைத் தவிர, பல விநோதமான பழக்கவழக்கங்களும் சில கோயில்களில் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளலூர் ஏழைகாத்த அம்மன் கோவிலில் பெண் சிறுமிகளை அம்மன்களாக தேர்ந்தெடுத்து 15 நாட்கள் விரதம் இருக்கும் திருவிழா நடைபெறுகிறது.
ஏழை காத்த அம்மன்
மேலூர் அருகே உள்ள வெள்ளலூரை தலைமையிடமாகக் கொண்டு சுற்றுப்புற பகுதியில் உள்ள 60க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளலூர் நாடு என பல நூறு ஆண்டுகளாக அழைக்கப்படுகிறது. இங்குள்ள வல்லடிக்காரர் சுவாமியும், ஏழை காத்த அம்மனும் இப்பகுதி மக்களின் காவல் தெய்வங்களாக உள்ளன. ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் நடைபெறும் ஏழை காத்த அம்மன் கோவில் திருவிழா இங்கு பிரசித்தி பெற்றதாகும். விழாவை முன்னிட்டு வழக்கம் போல் அம்மன் தெய்வங்களாக 7 சிறுமிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
7 பெண் தெய்வங்கள்
வெள்ளலூரில் உள்ள ஏழைகாத்த அம்மன் கோவில் வீட்டின் முன்பு, மூண்டவசி, வேங்கபுலி, சமட்டி, நைக்கான், சாயும்படைதாங்கி, சலிபுலி, திருமா, செம்புலி, நன்டகோபன், பூலான், எழுவராயன் எனப்படும் 11 கரைகளை சேர்ந்த 22 அம்பலகாரர்கள், 22 இளங்கச்சிகள் என்று அழைக்கப்படுபவர்களும், கிராம மக்களும் ஒன்று கூடினர். இவர்களின் முன்னிலையில் கோவில் பூசாரி சின்னத்தம்பி இந்த ஆண்டு விழாவிற்கு அம்மனாக வழிபடக் கூடிய 7 சிறுமிகளை பாரம்பரிய வழக்கப்படி தேர்வு செய்த பின்னர் இப்பகுதி மக்கள் கடுமையான பழமையான கட்டுப்பாடுகளுடன் 15 நாட்கள் விரதம் இருப்பார்கள்.
வெளிநாடுகளிலும் விரதம்
15 நாட்களுக்கு இந்த பகுதி மக்கள் அசைவ உணவு சமைக்காமலும், சமையலில் எண்ணெய்யை உபயோகிக்காமலும் இருப்பார்கள். இதையொட்டி கிராமங்களில் புரோட்டா கடைகள் மூடப்படும், வீடு கட்டுமான வேலைகள் நடக்காது, மரங்கள் வெட்டுவதில்லை. சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் வேலை பார்க்கும் இப்பகுதியை சேர்ந்த பல ஆயிரக்கணக்கானோரும் இந்த கட்டுப்பாடுகளுடன் விரதத்தை கடைபிடிப்பார்கள்.
மதுக்கலயம்
திருவிழாவின் போது பெண் பக்தர்களில் திருமணம் ஆகாதவர்கள் சிறிய மண் பொம்மைகளை சுமந்து வருவார்கள். திருமணமான பெண்கள் மண்கலையங்களில் பாலை ஊற்றி அதில் தென்னை மர குருத்துக்களை வைத்து அலங்கரித்து மதுக்கலயமாக சுமந்து வருவார்கள். இந்த ஊர்வலத்தில் பெரிய அம்பலகாரர் பாரம்பரிய வழக்கப்படி மாலை மரியாதைகளுடன் குடைபிடித்து அழைத்து செல்லப்படுவார். அதனை தொடர்ந்து 7 சிறுமிகளும் அம்மன்களாக அலங்கரிக்கப்பட்டு ஆசி வழங்கியபடி வருவார்கள்.
பாரம்பரிய வழக்கம்
திருவிழாவுக்கு விரதம் இருந்த பக்தர்கள் நேற்று வெள்ளலூரில் ஒன்று கூடினர். பாரம்பரிய வழக்கப்படி மாலை மரியாதைகளுடன் 7 சிறுமிகளும் அம்மன் தெய்வங்களாக பக்தர்களுக்கு ஆசி வழங்கியபடி ஊர்வலத்தில் வந்தனர். அதனைத் தொடர்ந்து பெரிய சேமகுதிரை வாகனங்களை பக்தர்கள் சுமந்து ஊர்வலத்தில் வந்தனர். பக்தர்கள் பாரம்பரிய வழக்கப்படி பல்வேறு விதங்களில் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
ஆண் பக்தர்கள்
ஆண் பக்தர்கள் உள்ளாடை மட்டும் அணிந்து வைக்கோலை கயிறு போல திரித்து உடல் முழுக்க இறுக்கமாக சுற்றிக்கொண்டும், பல விதமான உருவங்களில் முகமூடிகளை அணிந்தும் 7 கிலோ மீட்டர் தூரம் வெள்ளலூரில் இருந்து கோவில்பட்டியில் உள்ள கோவிலுக்கு ஊர்வலமாக நடந்து வந்தனர்.
பெண் பக்தர்களில் திருமணம் ஆகாதவர்கள் மண் பொம்மைகள் சுமந்து வந்தனர்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள்
திருமணம் ஆன பெண் பக்தர்கள் மண் கலயங்களில் பாலை ஊற்றி அதில் தென்னை மர குருத்து பாலைகளை வைத்து அலங்கரித்து மதுக்கலயங்களை சுமந்து வந்தனர். வெள்ளலூரில் தொடங்கி கோட்டநத்தம்பட்டி, அம்பலக்காரன்பட்டி விலக்கு வழியாக கோவில்பட்டியில் உள்ள ஏழைகாத்த அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர். 600 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த திருவிழா பாரம்பரியமாக கொண்டாடப்படுகிறது.