வைகையிலிருந்து தண்ணீர் திறங்கள்.. மதுரையில் 4 மாவட்ட விவசாயிகள் மறியல்
மதுரை: வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு மதுரை- வீரகனூர் சாலையில் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
மதுரை மாவட்டம் முள்ளிப்பள்ளம் பகுதியிலிருந்து 60 கிமீ பயணிக்கும் கிருதுமால் நதியின் மூலமாக மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்ட விவசாயிகள் பயன்பெறுகின்றனர். கடந்த 60 ஆண்டுகளாக கிருதுமால் நதி வாய்க்காலில் பாசனத்துக்குத் தண்ணீர் திறப்பதில்லை.
பொதுப் பணித் துறை
இதுகுறித்து நான்கு மாவட்டங்களின் ஆட்சியர்களிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. வைகை அணையில் இருந்து பாசனம் பெறும் அனைத்துப் பகுதிகளுக்கும் தண்ணீர் திறக்கப்படும் நிலையில், கிருதுமால் நதி பாசனத்துக்கு மட்டும் தண்ணீர் திறக்க பொதுப்பணித் துறையினர் மறுத்து வருகின்றனர்.
பாசனத்துக்கு அவதி
இதனால் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கரில் பாசனத்துக்கு தண்ணீரில் இல்லாமல் பயிர்கள் வீணாகியுள்ளன. மேலும் குடிநீரின்றி பொது மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
மறியல் போராட்டம்
இதையடுத்து வைகையிலிருந்து கிருதுமால் நதிக்கு தண்ணீர் திறக்கக் கோரி மேற்கண்ட 4 மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் மதுரை- வீரகனூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போக்குவரத்து பாதிப்பு
4 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
சீமான் வருகை
ஆயிரக்கணக்கான விவசாயிகள் சேர்ந்து நடத்தும் இந்தப் போராட்டத்தால் மதுரை - ராமேஸ்வரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் தலைவர் சீமான் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனும் வரவுள்ளார்.