பெற்ற மகளை.. கர்ப்பிணி என்றும் பாராமல்.. வெட்டி தள்ளிய தந்தை.. காதல் திருமணம் செய்ததால் வெறியாட்டம்
கர்ப்பிணி மகளை வெட்டிய தந்தை கைது செய்யப்பட்டார்
மதுரை: காதல் கல்யாணம் செய்து கொண்டதால், கர்ப்பிணி என்றுகூட பார்க்காமல் பெற்ற மகளை தந்தையே அரிவாளால் வெட்டிய சம்பவம் மதுரை மாவட்டத்தையே உலுக்கி உள்ளது.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே நாகையாபுரத்தை சேர்ந்தவர் வாலகுருநாதன். 55 வயதான இவர் உரக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு 19 வயதில் சுஷ்மா என்ற மகள் உள்ளார்.
இவர் பக்கத்து ஊரை சேர்ந்த சிவசங்கரன் என்ற 23 வயது இளைஞரை காதலித்து வந்துள்ளார். ஸ்கூல் படிக்கும்போது ஏற்பட்ட காதல், காலேஜ் வரை இருவருக்கும் தொடர்ந்தது. ஆனால் பாதியிலேயே சுஷ்மா படிப்பை நிறுத்திவிட்டார்.
தஞ்சம்
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் காதல் விவகாரம் வீட்டுக்கு தெரியவரவும் கடுமையான எதிர்ப்பு வந்துள்ளது. அதனால் வீட்டை விட்டு ஓடிப்போய் 2 மாசத்துக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி, நாகையாபுரம் போலீஸ் ஸ்டேசனில் தஞ்சம் அடைந்தது.
கர்ப்பம்
போலீசாரும் இரு தரப்பு பெற்றோரை அழைத்து பேசியும், அவர்கள் சம்மதிக்கவில்லை. குறிப்பாக, சுஷ்மாவின் தந்தை, சிவசங்கரனை வேறு சமூகம் காரணம் காட்டி ஏற்றுக் கொள்ளவே இல்லை. இதனால் காதல் ஜோடி சிவசங்கரனின் சொந்த ஊரான வாழவந்தாள்புரத்தில் வசித்து வந்தனர். இந்நிலையில் சுஷ்மா கர்ப்பமாகி உள்ளார்.
அலறல்
அதற்காக சிவசங்கரனுடன் திருமங்கலம் அடுத்துள்ள டி.புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்கு சென்றார். இந்த விஷயம் சுஷ்மாவின் அப்பா வாலகுருநாதனுக்கு தெரிந்துவிட்டது. ஆஸ்பத்திரிக்கு சென்ற அவர், மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சுஷ்மாவை சரமாரி வெட்டினார். இதில் தலை, முதுகு, கைகளில் சுஷ்மாவுக்கு கத்தி குத்து விழுந்தது. டாக்டரை பார்க்க போயிருந்த சிவசங்கரன் இந்த சத்தம் கேட்டு ஓடிவந்தார்.
முதலுதவி
அப்போது சிவசங்கரன், வாலகுருநாதன் மகளை வெட்டுவதை பார்த்து அலறி, அவரிடம் இருந்த அரிவாளை பிடுங்கி வீசியெறிந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள், ஒன்று திரளவும், வாலகுருநாதன் தப்பி ஓடினார் .ரத்தம் சொட்ட சொட்ட வழிந்து நின்ற சுஷ்மாவுக்கு அங்கேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
கைது
சிவசங்கரன் உடனடியாக திருமங்கலம் போலீசில் புகார் செய்யவும், வாலகுருநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். பெற்ற மகள் என்றும் பாராமல், கர்ப்பிணி என்றும் பாராமல் தகப்பனே அரிவாளால் வெட்டியது மாவட்டத்தில் அதிர்ச்சியை தந்துள்ளது.