கீழடி 5-ம் கட்ட அகழாய்வுகள் முடிவுகளில் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது: சு. வெங்கடேசன் எம்.பி.
மதுரை: கீழடியில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் 5-ம் கட்ட அகழாய்வுகளின் முடிவுகளில் இன்ப அதிர்ச்சி காத்திருப்பதாக லோக்சபா எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பண்பாட்டு கழகம் சார்பில் கீழடி வைகை நதி நாகரிகம் சிறப்பு மாநாடு மதுரையில் நடைபெற்றது இதில் தொல்லியல் அறிஞர் முனைவர் சொ.சாந்தலிங்கம், மதுரை லோக்சபா எம்.பி. சு.வெங்கடேசன், இயக்குநர் மற்றும் திரைப்பட நடிகர் சசிகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் பேசியதாவது: தமிழை குறைத்து மதிப்பிட்டவர்கள் திரும்பி பார்க்கும் அளவிற்கு கீழடி தற்போது உள்ளது, இந்தியாவில் எந்த இடத்திலும் பானையில் எழுத்து பதிவு இல்லை.
மூதாதையர் வழிபாடு
கீழடியில் கிடைத்த பானையில் எழுத்து பதிக்கப் பட்டிருப்பது தமிழ் மூத்த மொழி என்பதற்கு ஒரு சான்று, தமிழர்கள் மூதாதையர்களை வழிபட்டவர்கள், 2500 ஆண்டுகளுக்கு முன் இறைவழிபாடு இல்லை, இதை திராவிட நாகரீகம் எனவும் சொல்லலாம் , தமிழ் என்றாலும் திராவிடம் என்றாலும் ஒன்று தான்.
மண் முக்கியம்
திரைப்பட இயக்குநரும் நடிகருமான சசிகுமார் பேசியதாவது: அகழாய்வுக்கு அதிகமான பொறுமை வேண்டும், அங்கு எடுக்கப்படும் ஒவ்வொரு மண்ணும் முக்கியம், அரசியல், மதம், சாதிக்கு அப்பாற்பட்டது கீழடி வரலாறு,
பாடமாக வைக்க வேண்டும்
கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும், இவை அனைத்தும் புத்தகத்தில் பாடமாக இடம் பெற வேண்டும், நம் உரிமையை நாம் விட்டுக் கொடுக்க கூடாது.
எது பாரத பண்பாடு?
லோக்சபா எம்.பி. சு. வெங்கடேசன் பேசியதாவது: தற்போது வரை கீழடியின் வயது 15 ஆயிரம் ஆகும். காலத்தினால் மிகப் பழமையான கல்வெட்டுகள் வைகை நதிக்கரையில் அதிகமாக காணப்படுகின்றன. அதனால் தான் கீழடியை வைகை நதி நாகரீகம் என கூறுகிறோம். கீழடி அகழாய்வில் நமக்கு தெரிவிப்பது சமத்துவத்தை தூக்கி பிடிக்கும் சமூகம் வாழ்ந்துள்ளது என்பதும், ஆத்திகம், நாத்திகம் தொடர்பான எந்த தடயமும் இங்கு கிடைக்கவில்லை, 3 பக்க அறிக்கையில் கீழடி ஆராய்ச்சியை மத்திய அரசு கைவிட்டது. அதிமுக அமைச்சர் பாண்டியராஜன் கீழடியை பாரத பண்பாடு எனக் கூறுகிறார், பாரத பண்பாடு என்றால் என்ன என்பதை அவர் விளக்க வேண்டும். 5 கட்ட ஆய்வின் முடிவல் பல இன்ப அதிர்ச்சி வெளிவரும்,
அடுத்த முடிவுகளில் இன்ப அதிர்ச்சி
கீழழடியை பாதுகாப்பது நமது மரபை பாதுகாப்பது போன்றது, கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து, சர்வதேச அருங்காட்சியகம் அமைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.