நிர்வாணமாக்கி சோதனை செய்கிறார்கள்.. குமுறிய மதுரை கைதிகள்.. போராடிய 25 பேர் மீது வழக்கு
மதுரை சிறையில் போராட்டம் செய்த 25 கைதிகள் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.
மதுரை: "எங்களை நிர்வாணமாக்கி போலீசார் சோதனை செய்கிறார்கள்" என்று அரைநிர்வாண கோலத்திலும், பிளேடால் கிழித்து கொண்டும், மதுரை சிறையில் போராட்டம் நடத்திய கைதிகள் 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று யாருமே எதிர்பாராத வகையில், மதுரை மத்திய சிறைக்குள் கைதிகள் திடீரென போர்கொடி உயர்த்தினார்கள்.
பொதுவாக சிறைப்போராட்டம் என்றால் உண்ணாவிரதம் இருப்பார்கள்.. ஆனால் இந்த கைதிகள் மதுரையே ஆடிப்போகும் அளவுக்கு போராட்டத்தை கையில் எடுத்தனர். மதியானம் சாப்பிட்டு முடித்ததும் 3 மணி போல, கைதிகளின் எல்லாருடைய அறையிலும் சோதனை செய்வது போலீசாரின் வழக்கமான கடமை. இப்படித்தான் நேற்றும் சோதனை போட சென்றார்கள்.
ஆஹா கத்தரி வெயில் தொடங்க போகிறது.. அனல் பறக்க போகும் மீம்ஸ்கள்.. வெயிலில் எது ஃபிரையாக போகுதோ!
நிர்வாண சோதனை
அப்போது, 2 கைதிகளின் அறைக்குள் கஞ்சா, பிளேடு சிக்கின. அந்த இரண்டு பேரை மட்டும் தனியா கூட்டி சென்று விசாரித்தனர். மேலும் சிலரை நிர்வாணமாக்கி சோதனையிட்டதாக தெரிகிறது. இதற்குதான் கைதிகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. அதனால் கைதிகள் எல்லாம் கொஞ்ச நேரத்திற்கெல்லாம் ஒன்று சேர்ந்துவிட்டார்கள். பிடித்து சென்ற கைதிகள் போலீசாரிடமிருந்து விடுபட முயன்றனர்.
பிளேடால் கிழித்து கொண்டனர்
தள்ளுமுள்ளு ஆரம்பமானது.. மோதல் உருவெடுத்தது.. கைதிகள் கற்களை எடுத்து போலீசார் மீது வீசினார்கள்.. மரங்கள், கட்டிடங்களின் மேல் ஏறி போலீசுக்கு எதிராக கோஷமிட்டனர்... சிறையில் வசதி இல்லை என்று கூறி கூப்பாடு போட்டனர்.. சில கைதிகள் பிளேடால் உடம்பை கிழித்து காயப்படுத்தி கொண்டனர்.. சிலர் கையில் கிடைத்த தட்டு, டம்ளர்களை வீசி கொண்டே இருந்தனர்.. இப்படியே 3 மணி நேரமாக ஜெயிலுக்குள் பதற்றம் ஏற்பட்டது.
கலவர பூமி
கைதிகளின் இந்த செயலை பார்த்து போலீசார் மிரண்டே போய்விட்டனர். இவர்களை சமாளிக்க முடியாமல் அதிரடிப்படை வரவழைக்கப்பட்டு, கைதிகளிடம் பேச்சு நடத்தப்பட்டது. அதன்பிறகுதான் மரங்கள், கட்டிடங்கள் மீதிருந்து கீழே இறங்கினார்கள். அதற்குள் அந்த இடமே கலவர பூமியாகிவிட்டது. ரோடு முழுக்க கற்கள் குவியல் குவியலாக விழுந்து கிடந்தது.
கலவரம் வெடிக்கும்
இப்படி போலீசார் மீதே கைதிகள் தாக்குதல் நடத்தி இருப்பது ஆபத்தானது, அதனால் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும், இல்லையென்றால் திரும்பவும் கலவரம் வெடிக்கும் என்று போலீஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
வழக்கு பதிவு
இதையடுத்து, சிறைத்துறை அளித்த புகாரின்பேரில், போராட்டம் நடத்திய 25 கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகளை பணி செய்ய விடாமல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் கைதிகள் மீது கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.