தமிழக முன்னாள் அமைச்சர் ஜெனிபர் சந்திரன் காலமானார்!
மதுரை: முன்னாள் தமிழக அமைச்சர் ஜெனிபர் சந்திரன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.
திருச்செந்தூர் அமலிநகரை சேர்ந்தவர் ஜெனிபர் சந்திரன். 1996-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில், திருச்செந்தூர் தொகுதியில் இருந்து, திமுக சார்பில் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மீனவர் சமூகத்தை சேர்ந்த ஜெனிபர் சந்திரன், அந்த ஆட்சி காலத்தில் மீன்வளத்துறை அமைச்சராக்கப்பட்டார்.
ஆனால், அதன்பிறகு திமுக தலைமை மீது இவருக்கு அதிருப்தி ஏற்பட்டது. எனவே, 2004ம் ஆண்டு, ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி நடைபெற்றபோது, ஜெனிபர் சந்திரன் அதிமுகவில் இணைந்தார்.
இதற்கு பிரதி உபகாரமாக, ஜெனிபர் சந்திரனுக்கு, அதிமுக மாநில மீனவர் அணியின் இணைச் செயலர் பதவி வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் பதவியும் ஜெனிபர் சந்திரனுக்கு தேடி வந்தது.
பரூக் அப்துல்லா கைது செய்யப்படவில்லை, வீட்டுக் காவலிலும் இல்லை.. அமித் ஷா சொன்ன புது விளக்கம்
இதன் பின்னர் 2010ம் ஆண்டு, தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் பதவியிலிருந்து ஜெனிபர் சந்திரன் ஜெயலலிதாவால் நீக்கப்பட்டார். இந்த நிலையில், சமீப காலமாக, ஜெனிபர் சந்திரனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருந்தது.
ஜெனிபர் சந்திரன் உடல் நலக்குறைவுக்காக, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி, அந்த மருத்துவமனையில் இன்று ஜெனிபர் சந்திரன் காலமானார்.