காந்தியடிகளை மேலாடையை கழற்ற வைத்து அரையாடைக்கு மாற்றிய மதுரை சம்பவம்
இந்திய மக்கள் அனைவரும் என்றைக்கு முழு ஆடை அணிகிறார்களோ, அன்றுதான் நானும் அணிவேன் என்று மதுரையில் சூளுரைத்தார் மகாத்மா காந்தி. அப்படிப்பட்ட வரலாற்று சம்பவம் நிகழ்ந்த ஊர் மதுரை.
மதுரை: மதுரை மேலமாசி வீதி... இன்றைக்கும் அந்த இடத்திற்கு தனி சிறப்பிடம் இருக்கிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம்தான் அது. அங்குள்ள காதி கிராப்ட் கடையை பார்த்தவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கும். காந்தி தன் மேலாடையை துறந்த இடம் இங்குதான் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். இனி இதுதான் என் உடை என்று காந்தி சொன்ன தினம் செப்டம்பர் 20, 1921.
இந்திய சுதந்திர தினம் கொண்டாடப்படும் இந்த நேரத்தில் மதுரையில் காந்தியின் மனதில் ஏற்படுத்திய மாற்றம், உடையில் அவர் ஏற்படுத்திக்கொண்ட திடீர் அடையாளம், தான் இறக்கும் வரை அதை கடைபிடித்த வைராக்கியத்தை பார்க்கலாம்.
காந்தி என்றால் இன்றைய இளம் தலைமுறையினருக்கு நினைவுக்கு வருவது சிரிப்பும் கண்ணாடி அணிந்த முகமும்தான். அவர் ஏன் மேலாடை அணிவதில்லை என்று பலருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. மகாத்மா காந்தி தான் அணிந்திருந்த ஆடைகளை துறந்து நான்கு முழம் மட்டும் இடுப்பில் கட்டிக்கொண்ட அந்த வரலாற்று சம்பவம் நிகழ்ந்தது மதுரையில்தான்.
மதுரை வந்த மேலமாசி வீதியில் தங்கியிருந்த போது ஆடை கூட சரியாக அணிய முடியாத ஏழைகளும் இருக்கிறார்கள் என்பதைப் பார்த்த காந்தி இந்திய மக்கள் அனைவரும் என்றைக்கு முழு ஆடை அணிகிறார்களோ, அன்றுதான் நானும் அணிவேன்' என்று சூளுரைத்தார். அப்படிப்பட்ட வரலாற்று சம்பவம் நிகழ்ந்த ஊர்தான் மதுரை.
அடடே.. இந்த சீன வாக்சின் நல்லா வேலை செய்யுதாமே.. சோதனையில் வெற்றி கிடைச்சிருச்சாமே!
காந்தியின் உடை
மதுரைக்கு வரும் முன்பு வரை காந்தியின் ஆடை எப்படி இருந்தது என்றால் பத்து முழம் வேட்டி, அழகான கதர் சட்டை, அங்கவஸ்திரம் தலையில் ஒரு தொப்பி என குஜராத்தி ஸ்டைலில் இருப்பார். கதராடை அணியுங்கள் என்று காந்தி சொன்னாலும் பலரால் காந்தி சொன்னதை கேட்டு கடைபிடிக்க முடியவில்லை காரணம் கதராடையின் விலைதான்.
மதுரைக்கு வந்த காந்தி
மதுரைக்கு வரும் போதும் காந்தி தனது வழக்கமான உடையில்தான் வந்தார். மேலமாசி வீதியில் காங்கிரஸ் பிரமுகர்கள் ராம்ஜி, கல்யாண்ஜி வீட்டில் தங்கியிருந்த போது அவரைப்பார்க்க பலரும் வந்திருந்தார்கள். அவர்களில் பலர் சட்டை போட்டிருக்கவில்லை.
மதுரையின் வரலாற்று சம்பவம்
மேலமாசி வீதியில் உள்ள காங்கிரஸ் பிரமுகர்களான ராம்ஜி, கல்யாண்ஜியின் வீட்டில் தங்க ஏற்பாடு ஆகியிருந்தது. கோலாகலம் சூழ காந்தி வீட்டிற்குள் நுழைந்தார். இடுப்பை சுற்றி நான்கு முழ வேஷ்டி மட்டுமே கட்டியிருந்தார்கள். இதுவே பலரது அடையாளமாக இருந்தது. அதைப்பார்த்த அந்த நொடியில் காந்தியின் மனதில் மாற்றம் நிகழ்ந்தது.
காந்தியின் எளிய உடை
காந்தி தனது மேல் சட்டையை கழற்றினார். தலைப்பாகை அங்கவஸ்திரம் அனைத்தையும் துறந்தார். பத்து முழ வேஷ்டியை நான்கு முழமாக கிழித்து இடுப்பில் கட்டிக்கொண்டார். அதே தோற்றத்தோடுதான் மதுரையில் நடந்த கூட்டத்தில் பேசினார். காந்தி பேசிய அந்த பொட்டல் இன்றைக்கும் அவர் பெயரை சொல்லிக்கொண்டு இருக்கிறது.
லண்டனில் அரையாடை அணிந்த காந்தி
எளிமையான மனிதர்...மென்மையான பேச்சு என சராசரி மனிதராக மாறினார் காந்தி. அவரை மாற்றியது மதுரை. இனி இதுதான் என் உடை என்று காந்தி சொன்ன தினம் செப்டம்பர் 20, 1921. மதுரையில் மாறிய உடை லண்டன் போன போதும் மாறவில்லை.
லண்டன் வட்டமேஜை மாநாடுக்கு சென்ற போதும் அரையாடை அணிந்தே பங்கேற்றார் காந்தி. அங்கே அவருக்கு அரையாடை பக்கிரி என்ற பெயர் கிடைத்தது. அதைப்பற்றி கவலைப்படவில்லை.
காந்தியின் அஹிம்சை ஆயுதம்
ஆயுதபலம் மிக்க நம்மால் ஏன் காந்தியை ஏன் அடக்கமுடியவில்லை என்று இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட, அதற்கு வின்ஸ்டன் சர்ச்சில் அளித்த பதில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. "அந்த மனிதன் கத்தியை எடுத்தால் நான் துப்பாக்கியை எடுப்பேன். துப்பாக்கியை தூக்கினால் நான் பீரங்கியால் நசுக்கியிருப்பேன். பீரங்கியை எடுத்து போராடினால் நான் குண்டு மழை பொழிந்து அழித்திருப்பேன். அவர் அகிம்சை எனும் சத்தியத்தை அல்லவா எடுத்துக் கொண்டு போராடுகிறார். அகிம்சையை எதிர்க்கும் ஆயுதம் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை என்பதை நண்பர்களுக்கு சொல்லி வைக்க விரும்புகிறேன் என்றார்.
திருக்குறளை பின்பற்றிய காந்தி
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்ற குறள்தான் காந்தி அஹிம்சை வழியை போதிக்க, அஹிம்சை வழியை தேர்வு செய்வதற்கு காரணமாக விளங்கியது. தனது மரணம் வரைக்கும் பேச்சிலும் செயலிலும் ஒரே மாதிரியாக இருந்தார். அவரது வாழ்க்கையே ஒரு வரலாறுதான்.