விநாயகர் சதுர்த்திக்கு பிரம்மாண்ட சிலைகள் ஆர்டர் வரலையே - கவலையில் சிலை உற்பத்தியாளர்கள்
கொரோனா வைரஸ் பரவி வருவதால் பண்டிகைகளை கொண்டாங்கள் எதுவுமின்றி கோவிலுக்குள்ளேயே நடைபெறுகிறது. பிரம்மாண்ட சிலைகள் வைத்து வழிபட முடியாது என்பதால் புதிய ஆர்டர்கள் கிடைக்காமல் சிலை வடிவமைப்பாளர்கள் கவலையடை
மதுரை : கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல ஊர்களில் பிரம்மாண்ட விநாயகர் சிலைகளுக்கான ஆர்டர்கள் வராமல் சிலை வடிவமைப்பாளர்கள் கவலையடைந்துள்ளனர். மதுரையில் விநாயகர் சிலை வடிவமைப்பாளர்களும், விற்பனையாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு இதுவரை எந்த ஆர்டரும் வரவில்லை என்பது சிலை வடிவமைப்பாளர்களின் கவலையாகும்.
விநாயகர் சதுர்த்தி என்றாலே வீதியெங்கும் பல அடி உயரங்களில் வண்ணமயமான, வித விதமான விநாயகர் சிலைகளை காண முடியும். பிரம்மாண்ட பந்தல்கள் போட்டு விநாயகர் சிலைகளை வைத்து பத்து நாட்கள்வரை பஜனைகள் களைகட்டும். பிரசாதங்களை செய்து மக்களுக்கு கொடுத்து அசத்துவார்கள். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் எல்லாவற்றையும் முடக்கி போட்டு விட்டது. பெரிய அளவில் பண்டிகை கொண்டாட தடை உள்ளதால் பெரிய அளவில் சிலைகளுக்கு யாரும் ஆர்டர் கொடுக்கவில்லையாம்.
மதுரையில் விநாயகர் சிலை வடிவமைப்பாளர்களும், விற்பனையாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு இதுவரை எந்த ஆர்டரும் வரவில்லை என்பது சிலை வடிவமைப்பாளர்களின் கவலையாகும். கொரோனா வைரஸ் 10 லட்சம் மனிதர்களின் உயிரை மட்டும் குடிக்கவில்லை. கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை குடித்து விட்டது.
பண்டிகைகாலங்களில் மட்டுமே படியளக்கும் கடவுள்கள் கோவிலுக்குள் முடங்கிவிட்டதால் பல அன்றாடங்காய்ச்சி தொழிலாளர்கள் பசியோடு படுத்து பசியோடு கண் விழிக்கிறார்கள். மதுரை விளாச்சேரி கிராமத்தில் விநாயகர் சிலை வடிவமைப்பாளர்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்டு விட்டது கொரோனா வைரஸ்.
ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பிரம்மாண்ட சிலைகளை தயாரித்து விற்பனை செய்யும் மக்களுக்கு இந்த ஆண்டு இதுவரை ஒரு சிலை கூட ஆர்டர் வரவில்லையாம். எந்த ஆண்டுமே இதுபோல இருந்ததில்லை. இந்த ஆண்டு கொரோனா வந்து இப்படி எங்களின் வாழ்க்கையை முடக்கி போட்டு விட்டதே என்று கவலைப்படுகிறார் சிலை வடிவமைப்பாளர் அழகர். பண்டிகைகள், திருவிழாக்களை நம்பியே எங்களின் வாழ்வாதாரம் இருக்கிறது என்று கூறும் இருவர், எங்களுக்கு இழப்பீடாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 31 வரை லாக்டவுன் நீடிப்பு - 4 ஞாயிறுகளில் முழு லாக்டவுன்
இதே போல கொரோனா காலம் என்பதால், சிலைகளுக்கு ஆர்டர் வரவில்லை என்கின்றனர் கோவையைச் சேர்ந்த சிலை வடிவமைப்பாளர்கள். வீடுகளில் வைத்து வழிபடும் சிறிய களிமண் சிலைகள் மட்டுமே செய்யப்பட்டு வருகின்றன. வழக்கமாக 10,000 களிமண் சிலைகள் செய்வோம் எனக் கூறும் சிலை வடிவமைப்பாளர்கள், இந்தாண்டு 3000 சிலைகள் மட்டுமே செய்வதாகவும், அதுவும் விற்குமா என்பது கேள்விக்குறியாக இருப்பதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வழக்கமாக ஆர்டரின் பேரில், 13 அடி உயரம் வரை பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் செய்யப்படும் நிலையில், இந்தாண்டு ஊரடங்கினால் ஆர்டர் அதிகம் கிடைக்கவில்லை என தொழிலாளர்கள் கவலையடைந்துள்ளனர். சிறிய அளவிலான சிலைகளை மட்டுமே தயார் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். தங்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்பது சிலை வடிவமைப்பாளர்களின் கோரிக்கையாகும்.