விநாயகர் சதுர்த்தி விழா: தேவையில்லாமல் வழக்குப் போடுவதா.. மனுதாரருக்கு ஹைகோர்ட் கிளை எச்சரிக்கை
மதுரை: தினந்தோறும் 6 ஆயிரம் நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் இந்த சூழலில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் நலதிட்ட நிகழ்ச்சி நடத்த எவ்வாறு அனுமதி கொடுக்க முடியும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
ராஜபாளையத்தை சேர்ந்த ராமராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
ராஜபாளையம் அருகே தர்மாபுரம் பகுதியில் அமைந்திருக்கும் ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் கோயிலில் கடந்த 32 வருடங்களாக விநாயகர் சதுர்த்தி விழா மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் எதிர்பாராத விதமாக உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்று பரவி வருகிறது.
இதனால் தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராஜபாளையம் தர்மாபுரம் ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் கோயிலில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில் முதலாம் நாள் ஆகஸ்ட் 21-ஆம் தேதி 25 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம், ஏழை எளிய மாணவர்களுக்கு புத்தகம் மற்றும் நோட்டுகள் வழங்கப்படுகிறது மேலும் 25 ஏழை எளியோருக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். விநாயகர் சதுர்த்தி நாளன்று ஐந்து ரதத்துடன் விநாயகர் ஊர்வலம் நடைபெறும்.
உரிய பாதுகாப்பு சமூக இடைவெளி பின்பற்றி நடத்த ஏற்பாடுகளுடன் இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவதற்கு அனுமதி அளிக்க பல்வேறு அதிகாரிகளை நேரில் சென்று மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. எனவே, ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் கோவிலில் இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி விழா ஆகஸ்ட் 21 மற்றும் 22ம் தேதி நடத்துவதற்கான அனுமதி அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், ஆஜரான வழக்கறிஞர், விநாயகரை வைத்து வழிபடுவதற்கு அனுமதியும் பாதுகாப்பு தர வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதனைக் கேட்ட நீதிபதி கொரோனா தாக்கம் உலக நாடுகளையே அச்சுறுத்தி கொண்டிருக்க கூடிய சூழலில் தமிழகத்தில் தினந்தோறும் 6 ஆயிரம் நபர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் மனுதாரர் எவ்வாறு விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் நலதிட்ட நிகழ்ச்சி நடத்த அனுமதி கேட்கிறார்.
அபாயகரமான ஆலையை நிறுவ ஸ்டெர்லைட்டுக்கு அடிப்படை உரிமையே இல்லை- ஹைகோர்ட் தீர்ப்பு முழு விவரம்
இதில் எவ்வாறு கட்டுப்பாடுகளை நீதிமன்றம் விதிக்க முடியும். இதனால் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படலாம். எனவே இதுபோன்ற சூழலில் இந்த மனு தேவையில்லாத ஒன்று. இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரங்களை வீணடிக்க வேண்டாம். தற்போது இந்த மனுவிற்கு அவசரமும் கிடையாது. எனவே, மனுதாரர் மனுவை திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் நீதிமன்றம் அபராதம் விதிக்க நேரிடும், என நீதிபதி தெரிவித்தார்.